/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நுாறு நாள் வேலைக்கோரி வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
/
நுாறு நாள் வேலைக்கோரி வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 06, 2024 01:57 AM

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம்,சாத்தணஞ்சேரி கிராமத்தில், பாலாற்றங்கரையோரம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், குறிப்பிட்ட ஒரு பகுதியை, அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தில் பொதுக்குளம் அமைக்க ஊராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான முதற்கட்ட பணியாக, கடந்த 3ம் தேதி, அப்பகுதியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் பணியாற்றும் அத்தொழிலாளர்களை கொண்டு ஆக்கிரமிப்பு இடத்தில் செடி, கொடிகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.தொடர்ச்சியாக நேற்று குளம் எடுப்பதற்கான பணி துவங்கப்பட இருந்தது.
இதனிடையே, அந்த நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிலத்தில் உழவு செய்தல் உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால், சாத்தணஞ்சேரி ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியை மேற்கொள்வதில் நேற்று தடை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு பணி வழங்கக்கோரியும், ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் சாத்தணஞ்சேரி வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.