/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு மலர் கட்டுரை....3
/
வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பு மலர் கட்டுரை....3
ADDED : மே 26, 2024 01:14 AM

கோவில் விபரம்:
இந்தியாவில் காஞ்சிபுரம் நகரம் மிகவும் புராதன நகரம் முக்தி தரும் ஏழு நகரங்களில் அயோத்தியா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி ஆகிய நகரங்களில் முக்கியமான நகரமாகும். இந்நகரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. மகாகவி காளிதாசனால் நகரேஷு காஞ்சி என்று புகழப்பட்ட நகரமாகும்.
வைணவ திருத்தலங்களில் கோயில் என்றால் ஸ்ரீரங்கம் , திருமலை என்றால் திருவேங்கடம் பெருமாள் கோயில் என்றால் இத்திருக்கோயிலை குறிக்கும். இத்திருக்கோயிலில் திருக்கச்சி நம்பிகள் ஆலவட்ட கைங்கர்யம் செய்துள்ளார். ஸ்ரீபெருமாள் அவரிடம் தினமும் பேசுவார், இத்திருக்கோயிலுக்கு ராமானுஜர் தினமும் திருமஞ்சன (தீர்த்தம்) கைங்கர்யம் செய்துள்ளார்.
இத்திருமஞ்சன தீர்த்தம் இத்திருக்கோயிலிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவிலிமேடு என்ற கிராமத்தில் அமைந்துள்ள சாலக்கிணறு என்ற இடத்தில் இருந்து கொணரப்பட்டது. தற்போதும் இந்நிகழ்வு தினமும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீராமானுஜர் இத்திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு ஆளவந்தாரிடம் சன்யாசம் பெறுவதற்கு திருவரங்கம் சென்றார்.
தல வரலாறு
பிரம்மா உலகத்தை படைத்து முடித்த பின்னர் ஸ்ரீ பெருமாளை அதே உருவத்தில் தரிசனம் தரவேண்டும் என்று ஆசைப்பட்டார். நெடுங்காலம் தவம் இருந்தும் பலன் ஏற்படவில்லை. அதை கண்டு கலங்கி நின்ற போது ஒரு அசீரிரி வாக்கு உண்டாயிற்று. நீர் ஆயிரம் அஸ்வமேதயாகங்கள் செய்தாலன்றி தாங்கள் வேண்டும் பலனை பெறமாட்டீர். அவைகளை செய்ய வெகு காலமாகும். ஒரு வழி சொல்கிறேன்.
பாரத நாட்டிலே ஸத்யவ்ரதம் என்று ஒரு தலம் இருக்கிறது. அந்த தலத்தில் ஒரு நற்செயல் செய்ய ஆயிரமாக பலன் தரும். அங்கே சென்று பெருமாளைக் குறித்து ஒரு அஸ்வமேத யாகம் செய்தால் உமது எண்ணம் நிறைவேறும். உடனே பிரம்மா தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து சத்யவ்ரத தலத்தில் அத்திகிரியை (யானை வடிவிலான) உத்திரவேதிகையாக வைத்து தாம் வேள்வி நடத்தப்போவதாக கூறி அதன் பொருட்டு அங்கே ஒரு நகரத்தை நிர்மானம் செய்யும்படி கூறினார்.
விஸ்வகர்மாவும் விண்ணவரும் வியக்கும்படியான அழகு வாய்ந்த ஒரு நகரத்தை உருவாக்கினார். அங்கே நான்முகன் யாகம் செய்ய தொடங்கினார். தமது மனைவியாகிய சரஸ்வதி தேவி தம்மை விட்டகன்று சிலகாலமாக தனியே இருந்து வந்தபடியால் அவளை அழைத்து வரும்படி தம் மகனான வசிஷ்டரை அனுப்பினார்.
சரஸ்வதி தேவியின் கோபம் தனியாததால், வர மறுத்துவிட்டாள். எனவே அவளில்லாமலே வேள்வி நடத்தத் தீர்மானித்து செயல்கள் நடந்ததேறி வந்தன. இதைச் செவியுற்ற நாமகளும் மிகுந்த கோபம் கொண்டு ஒரு நதியாக உருவெடுத்து யாகசாலையை எல்லாம் பாழ்பட செய்ய எண்ணி வந்தாள்.
அதைக்கண்டு பிரம்மா என்ன செய்வதன்று அறியாமல் கதி வேறில்லாதவர்கெல்லாம் கதியாய் நிற்கும் நாராயணனை சரணம் புகுந்து இப்பேராப்பதிலிருந்து தம்மை காபாற்றி தாம் செய்ய வேண்டிய வேள்வியயை எவ்வித இடையூறுமின்றி நிறைவேற்றி வைக்க வேண்டுமென வேண்டி நின்றார்.
நாராயணனும் ஆதிஷேஷன் மேல் சயனித்துக்கொண்டு நதி ஓடி வரும் வழியில் குறுக்கே ஒரு அணையாகக்கிடந்தார். அவரை தாண்டி மறுபுறம் செல்ல சக்தியற்றவளாய் சரஸ்வதியும் பூமியில் நுழைந்து மறைந்து விட்டாள். அதிவேகமாக வந்தபடியால் அந்த நதிக்கு வேகவதி என்று பெயர் பெற்றாள். வேகத்தை அணையிட்டு தடுத்து அணையான அரவணையானுக்கு வேகாசேது என்ற பெயர் ஏற்பட்டது.
அந்த நாகணைமிசை நம்பரன் தான் இப்போது திருவெஃகா என்னும் திருதலத்தை அலங்கரிக்கும் யதோக்தகாரியாக விளங்குகிறார். அதன்பின் சரஸ்வதி மணம் இறங்கி வர பிரம்மாவுடன் சேர்ந்து அஸ்வமேத யாகத்தை இடையூறு இன்றி நடத்தினார்.
அந்த வேள்வி நாராயணனை உத்தேசித்து செய்யப்பட்டதாகையால் அங்கே பிரம்மா அவிர்பாகங்களை எந்தெந்த தேவதையின் பெயரைச் சொல்லி கொடுத்தாரோ அவை அந்தெந்த தேவதைகளுக்கு போய் சேராமல் எல்லா சப்தங்களுக்கும் பொருளாய் எல்லா தேவதைகளுக்கும் அதிபதியான திருமாலுக்கே நேராகச் சேர்ந்து விட்டன.
உடனே அந்த அக்னியின் நடுவிலிருந்து பலகோடி சூர்யர்களுக்கு இணையான ஒரு விமானம் தோன்றிற்று. அந்த விமானத்தின் நடுவில் அழகான தோற்றத்துடன் ஆயுதம் ஏந்தியவராய், திருமகள், மண்மகள் ஆகிய தேவியருடன் சூழபட்ட வராயும் பகலோனைச் பகல் விளக்காகச் செய்யும் ஒளிபொருந்தியவராயுமுள்ள வரதன் தோன்றினார்.
அவரை பலவிதங்களாக பூசித்து வணங்கி வழிபாடு செய்தார். அந்த வழி பாட்டினால் நிறைவடைந்த பெருமாளும் உமக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அனைத்து உயிர்களும் நாராயணனை வரதர் உருவத்தில் கண்டு மகிழ்ச்சியடைவது போல வந்து ஜீவராசிகளும் என்றென்றைக்கும் எல்லா உயிர்களும் வரதரை கண்டு மகிழ்ச்சியடைந்து வீடுபேறு அடையுமாறு அருளிட இந்த அத்திகிரியிலே நிரந்தரமாக எழுந்தருள வேண்டும் என்று பிரம்மா கேட்க கேட்ட வரங்களை கொடுக்கும் வரதன் என்று சிறப்பு பெயருடைய நாராயணனும் அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார்,
அது முதல் அத்திகிரியில் எல்லாரும் நேராகக் கண்டு அனுபவிக்குபடியான நிலையில் காட்சி தருகிறார். தேவாதிராஜன் என பெயர் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைக் கிருதயுகத்தில் பிரம்மா பூஜை செய்தார். திரேதா யுகத்தில் முதலையால் துன்புற்ற கஜேந்திரன் அவரை பூஜித்து காப்பாற பெற்றார், துவாபரயுகத்தில் தேவகுருவான ப்ரஹஸ்பதியால் அர்ச்சிக்கப்பட்டார்.. கலியுகத்தில் ஆதிஷேஷனால் அர்ச்சிக்கப்படுகிறார்.