/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி - செங்கை காவல் எல்லையில் 10 கிராமங்கள்... திணறல்: ஆறு ஆண்டுகளாக மக்கள் அலைக்கழிப்பு தொடர்கிறது
/
காஞ்சி - செங்கை காவல் எல்லையில் 10 கிராமங்கள்... திணறல்: ஆறு ஆண்டுகளாக மக்கள் அலைக்கழிப்பு தொடர்கிறது
காஞ்சி - செங்கை காவல் எல்லையில் 10 கிராமங்கள்... திணறல்: ஆறு ஆண்டுகளாக மக்கள் அலைக்கழிப்பு தொடர்கிறது
காஞ்சி - செங்கை காவல் எல்லையில் 10 கிராமங்கள்... திணறல்: ஆறு ஆண்டுகளாக மக்கள் அலைக்கழிப்பு தொடர்கிறது
UPDATED : ஆக 25, 2025 01:01 AM
ADDED : ஆக 25, 2025 01:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும், காவல் நிலைய எல்லையில் 10 கிராம மக்கள் சிக்கி திணறி வருகின்றனர். புகார், விசாரணை உள்ளிட்டவற்றுக்கு ரொம்ப துாரம் செல்ல வேண்டியிருப்பதால், கிராம மக்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர். போலீசாருக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
![]() |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு காவல் கோட்டங்களில், 44 காவல் நிலையங்கள் இருந்தன. 2019ல், காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதும், இரு மாவட்டங்களுக்கு ஏற்றவாறு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன.
இதில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், 10 கிராமங்கள் சரிவர பிரிக்கப்படாததால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
8 கி.மீ.,பயணம்
அதாவது, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 10 கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லையில், இப்போது வரை உள்ளது.
எல்லை பிரிப்பில் கோட்டைவிட்ட அதிகாரிகளால், ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆலப்பாக்கம், எல்.எண்டத்துார் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதேபோல, புகார் அளிப்பதற்காகவும், திருவிழாவுக்கு பாதுகாப்பு கேட்கவும், 8 கி.மீ., பயணித்து, உத்திரமேரூர் செல்ல வேண்டியுள்ளது. சட்டம் - ஒழுங்கு விவகாரம் என்றாலும், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், செங்கல்பட்டு கலெக்டருக்கு அறிக்கை அளிப்பர்.
![]() |
அதேபோல, காவல் துறை அறிக்கைகள், காஞ்சிபுரம் எஸ்.பி.,க்கு அளிக்க வேண்டியுள்ளது. 10 கிராமங்களில் நடக்கும் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் என, எந்த நிகழ்வுக்கும், உத்திரமேரூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் காவல் நிலைய எல்லையில் உள்ள 10 கிராமங்களை, 5 கி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையத்தில் இணைக்க வேண்டும். ஆனால், மாவட்டம் பிரித்து ஆறு ஆண்டுகளாகியும் இணைக்கப்படவில்லை.
எதிர் பார்ப்பு
புகார் அளிப்பதில் கிராமவாசிகளுக்கு ஏற்படும் அலைச்சலை தவிர்க்கவும், போலீசாருக்கு ஏற்படும் இந்த நிர்வாக குழப்பத்தை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட கிராமங்களை படாளம் காவல் நிலையத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசாரும், கிராமமக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'எல்லையில் உள்ள 10 கிராமங்களை, செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்க தேவையான அறிக்கை, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. விரைவில் உரிய அனுமதி கிடைக்கும்' என்றார்.