/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாந்தி, வயிற்றுப்போக்கால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
/
வாந்தி, வயிற்றுப்போக்கால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
வாந்தி, வயிற்றுப்போக்கால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
வாந்தி, வயிற்றுப்போக்கால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
ADDED : நவ 23, 2024 12:35 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, 10வது வார்டில் உள்ள உப்பேரிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 35. இவரது மனைவி ரோஜா, 28. தம்பதி இருவருக்கும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இதில், இரண்டாவது மகளான, 4 வயதுடைய மோனிகா, அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று, ஆரம்ப கல்வி பயின்று வந்தார். இரு நாட்களாகவே சிறுமிக்கு சளி, இருமல் என, உடல்நிலை சரியில்லாத நிலை இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கன்வாடி மையத்திற்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு வழங்கப்பட்ட உணவை மதியம் சாப்பிட்டுள்ளார். மதியம் வீட்டிற்கு வந்த சிறுமிக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அருகில் உள்ள நகர்நல மையத்திற்கு அவரது தாய் அழைத்து சென்றுள்ளார். அங்கு, மருத்துவமனை ஊழியர்கள் வழங்கிய மருந்து, மாத்திரைகளை சிறுமிக்கு கொடுத்துள்ளனர்.
இருப்பினும், உடல்நிலை சரியில்லாத சூழல் தொடர்ந்துள்ளது. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு திடீரென மயக்க நிலையில் இருந்த சிறுமியை, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
மருத்துவர் பரிசோதனை செய்ததில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையிலேயே கதறி அழுதனர்.
நேற்று முன்தினம் மதியம் அங்கன்வாடி மையத்தில் சிறுமி உணவு சாப்பிட்டதால், குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தினர்.
மாநகராட்சி அலுவலகத்தின் சுகாதார பிரிவு அதிகாரிகள், அங்குள்ள குடிநீரில் பிரச்னை உள்ளதா என ஆய்வு நடத்தி வருகின்றனர். 4 வயது சிறுமி உயிரிழந்ததால், உப்பேரிக்குளம் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.