/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் திட்ட பணிக்காக 555 சாலைகள். பெயர்த்தெடுப்பு சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
/
குடிநீர் திட்ட பணிக்காக 555 சாலைகள். பெயர்த்தெடுப்பு சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
குடிநீர் திட்ட பணிக்காக 555 சாலைகள். பெயர்த்தெடுப்பு சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
குடிநீர் திட்ட பணிக்காக 555 சாலைகள். பெயர்த்தெடுப்பு சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 27, 2025 09:59 PM

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகளில், ‛அம்ரூத்' திட்டத்தில், குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணியால், 555 இடங்களில் சாலை பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் பல சிரமத்தை சந்திப்பதோடு, விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்துார், மாங்காடு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நகராட்சிகள், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகள் என, நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன.
புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான, ‛அம்ரூத்' திட்டத்தின் கீழ், 2021 - 22ம் ஆண்டு முதல், 2025 - 26 வரை, குடிநீர் வழங்குதல், கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்துதல் மற்றும் நகர்ப்புற இடங்களில், பசுமையான பூங்காக்கள் அமைக்கும் பணிகளை செய்யலாம் என, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதில், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய பேரூராட்சிகளில், 74.82 லட்சம் ரூபாய் செலவில், பூங்காக்கள் கட்டுமான பணிகள், இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவு பெற்றுள்ளன.
வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில், 35.69 கோடி ரூபாய் செலவில், 'அம்ரூத்' திட்டத்தில் குடிநீர் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சியில், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, நான்கு தண்ணீர் உறிஞ்சும் கிணறுகள், இரண்டு நீரேற்றும் நிலையம், இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 12 கி.மீ., பிரதான குழாய், 80 கி.மீ., குடிநீர் வினியோக குழாய் அமைக்க திட்டமிட்டு உள்ளனர். இப்பணிகளுக்காக, 20.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வாலாஜாபாத் பேரூராட்சிக்கு பாலாற்றில் இருந்து, நான்கு உறிஞ்சு கிணறுகள், ஒரு நீரேற்றும் நிலையம், ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2.25 கி.மீ., பிரதான குழாய், 47.76 கி.மீ., குடிநீர் விநியோக குழாய் போடப்பட உள்ளன. இதற்கு, 14.79 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் பணிகளுக்கு, 2023ல் டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை, 2024 செப்., மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, அவகாசம் அளிக்கப்பட்டது. அதை கடந்தும், குடிநீர் வளர்ச்சி பணிகள் முடியவில்லை.
இதையடுத்து, துறை சார்ந்த அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்திற்கு பின், 2025 மார்ச் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
காலக்கெடு முடிந்து ஆறு மாதங்களாகியும், குடிநீர் திட்ட பணிகளை, பேரூராட்சிகளில் ஒப்பந்தம் எடுத்தவர் நிறைவு செய்யவில்லை என, கவுன்சிலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில், குடிநீர் குழாய் பதிக்க, ஏற்கனவே இருந்த கான்கிரீட் சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, வாலாஜாபாத் பேரூராட்சியில், 250 இடங்கள்; உத்திரமேரூர் பேரூராட்சியில், 305 இடங்கள் என மொத்தம், 555 இடங்களுக்கு மேலாக சேதமடைந்த பள்ளங்கள் இருப்பதாக, பேரூராட்சி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகள் இருப்பதால், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:
'அம்ருத்' திட்ட குடிநீர் பணிகளுக்கு தோண்டிய பள்ளங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் மூடுவதற்கு வழி வகை செய்யவில்லை. வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என, பல தரப்பட்ட மக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, சேதப்படுத்தப்பட்ட இடங்களில் புதிய சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளில், 35.69 கோடி ரூபாய் செலவில், புதிய குடிநீர் பணிகள் நடந்து வருகின்றன.
தனித்தனி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க சாலையோரம் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த சாலை சேதமடைந்துள்ளது என கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.
சேதமடைந்த இந்த சாலைகளை சீரமைக்க 'அம்ருத்' திட்டத்தில், உத்திரமேரூருக்கு 4 கோடி; வாலாஜாபாதிற்கு 3 கோடி என, ஏழு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில், சாலை சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

