/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைகிறது! காஞ்சி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது தமிழக அரசு
/
உத்திரமேரூரில் 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைகிறது! காஞ்சி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது தமிழக அரசு
உத்திரமேரூரில் 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைகிறது! காஞ்சி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது தமிழக அரசு
உத்திரமேரூரில் 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைகிறது! காஞ்சி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது தமிழக அரசு
ADDED : அக் 22, 2024 07:39 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரடகம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் ஏற்கனவே 7 சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வரும் நிலையில், உத்திரமேரூர் தாலுகாவில், 750 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, காஞ்சி நிர்வாகத்திடம், அறிக்கை கேட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகவும், உற்பத்தி, ஏற்றுமதி என, தொழில் துறைக்கு அனைத்து வகையிலான சாதகங்கள் கொண்டதாக காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது.
விபரம் சேகரிப்பு
இதனால், உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு தொழிற்சாலைகள் பலவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றன.
மாவட்டம் முழுதும், சிறியதும், பெரியதுமாக, 2,300க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், கண்ணாடி, ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், ரசாயணம், டயர் என, பல வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளை சுற்றி, 7 சிப்காட் தொழிற் பூங்காக்கள் இயங்குகின்றன. இதில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், அடுத்தகட்டமாக உத்திரமேரூர் தாலுகாவில், திருப்புலிவனம், மருதம் ஆகிய இரு கிராமங்களிலும் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க, தமிழக தொழில் துறை முடிவு செய்துள்ளது.
அங்கு, நிலத்தை கையகப்படுத்தி தரவும், அதற்கு ஆகும் செலவினம் பற்றிய முழு விபரங்களை தயாரித்து, கருத்துருவாக அனுப்ப, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் தொழில்துறை கேட்டுள்ளது.
திருப்புலிவனம் கிராமத்தை சுற்றி புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தேவையான அடிப்படை விபரங்களை வருவாய் துறையினர் சேகரிக்க துவங்கியுள்ளனர்.
பொருளாதாரம் உயரும்
திருப்புலிவனம் சுற்றி, 750 ஏக்கர் பரப்பளவில், இந்த சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், 500 ஏக்கர் பரப்பளவில், அரசு நிலங்கள் இருப்பதால், மீதமுள்ள தனியார் பட்டா நிலங்களை கையகபடுத்துவதில் சிரமம் இருக்காது என, தொழில் துறை கருதுகிறது.
உத்திரமேரூர் தாலுகாவில் வசிக்கும் இளைஞர்கள், பெண்கள், பட்டதாரிகள் என பல தரப்பினரும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சிப்காட் தொழிற்சாலைகளுக்கும், அருகில் உள்ள செய்யாறு சிப்காட் தொழிற்சாலைக்கும் பணிக்கு செல்கின்றனர்.
திருப்புலிவனத்தில் தொழிற்சாலைகள் அமைந்தால், வேலைவாய்ப்பு பெறுவதோடு, குடும்ப பொருளாதாரத்தை ஓரளவு உயர்த்த வாய்ப்பு ஏற்படும்.
உத்திரமேரூர் அருகே, 5 கி.மீ., தொலைவில், திருப்புலிவனம் கிராமத்தில் சிப்காட் அமைக்கப்பட்டால், உத்திரமேரூர் தாலுகாவில் வசிப்போர், அங்கேயே இயங்கும் தொழிற்சாலைகளில் பணியாற்ற முடியும். நீண்ட துாரம் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிப்காட் அமைப்பதற்கான கருத்துருவை மாவட்ட நிர்வாகம் தயாரித்து வருகிறது.
இன்னும் அரசுக்கே சமர்ப்பிக்காத நிலையில், மருதம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், கலெக்டர் கலைச்செல்வியிடம், மக்கள் குறைதீர் கூட்டத்தில், சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
'மருதம் கிராமத்தில், 1,500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் இருப்பதாகவும், அவற்றை நில எடுப்பு செய்ய அனுமதிக்க மாட்டோம்' என, மனுவில் தெரிவித்துள்ளனர்.
வாய்ப்புகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏற்கனவே இயங்கும் சிப்காட் தொழிற்சாலைகள் வாயிலாக, அரசுக்கு ஆண்டுதோறும் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில், உத்திரமேரூர் அருகே, மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டால், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, அங்குள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அதிகளவு வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'திருப்புலிவனம் அருகே சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தி தர, சிப்காட் நிறுவனம் கேட்டுள்ளது. சிப்காட் அமைப்பது பற்றி அரசு தான் முடிவு செய்யும்' என்றார்.
அரசுக்கு சொந்தமான நிலம், திருப்புலிவனம் பகுதியில், 500 ஏக்கர் வரை உள்ளது. இதனால், அங்கு சிப்காட் அமைந்தால் நல்லது என நினைக்கிறோம். உத்திரமேரூர் மக்கள் மாங்கால், ஒரகடம் போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைக்கு நீண்ட துாரம் பயணிக்கின்றனர். அதுபோன்ற அலைச்சல் இத்திட்டத்தால் குறையும். மருதம் கிராம மக்கள் இது சம்பந்தமாக என்னை வந்து பார்த்தார்கள். விவசாயிகள் பாதிக்காத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தொழில் ரீதியாக உத்திரமேரூர் தாலுகா பின்தங்கியிருப்பதாக, 30 ஆண்டுகளுக்கு முன்பாக, சட்டசபையில் கோரிக்கை விடுத்தேன். அப்போதைய முதல்வர் கருணாநிதியின் இந்த தாலுகாவை தொழில்ரீதியாக பின்தங்கிய தாலுகாவாக அறிவித்தார். அதன் தாக்கம் தான், தொழிற்சாலைகள் இப்போது வருவதற்கு காரணம்.
- க.சுந்தர்
தி.மு.க., - -எம்.எல்.ஏ.,
உத்திரமேரூர்.
-----------------------சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க, திருப்புலிவனம் பகுதியில் பலரும் கேட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு சிலர் ஆதரவும்; சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். இருப்பினும், சிப்காட் அமைப்பது பற்றிய கருத்துரு அரசுக்கு அனுப்புகிறோம். இத்திட்ட பணிகள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது.
- கலைச்செல்வி, கலெக்டர், காஞ்சிபுரம்.