/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் 10ல் 8 பேருக்கு சுவாசப்பாதை பாதிப்பு
/
சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் 10ல் 8 பேருக்கு சுவாசப்பாதை பாதிப்பு
சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் 10ல் 8 பேருக்கு சுவாசப்பாதை பாதிப்பு
சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் 10ல் 8 பேருக்கு சுவாசப்பாதை பாதிப்பு
ADDED : செப் 22, 2024 05:34 AM
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சுவாசப்பாதை தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இருமல், சளி, தொண்டை வலி, சில நேரங்களில் அதீத காய்ச்சலுடன் கூடிய 'இன்ப்ளுயன்சா' வைரஸ் தொற்றுகளால் குழந்தைகள், முதியோர், இணை நோய் உள்ளோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த தொற்றுகளின் பாதிப்புகளுக்கு, புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற்று செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
'எச்1 என்1, எச்3 என்2' இன்ப்ளுயன்சா வைரஸ் தொற்று, குளிர் மற்றும் மழைக்காலத்தில் அதிகமாக பரவக்கூடியது.
கோடை காலமான மே மாதத்தில் இருக்கும் அதிகமான வெப்பநிலை, செம்படம்பர் மாதத்தில் உள்ளது. ஆனாலும், இன்ப்ளுயன்சா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதற்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்.
ஐந்து நாட்கள் கடுமையான இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களை பரிசோதனை செய்ததில், 10 பேரில் 8 நபர்களுக்கு நுரையீரல் சார்ந்த சுவாசப்பாதை தொற்று பாதிப்புள்ளது.
ஒரு வாரத்தில் பிரச்னைகள் சரியாகிவிடுகிறது. சிலருக்கு மட்டும் 2 வாரம் முதல் 6 வாரம் வரை கடுமையான இருமல் பிரச்னை நீடிக்கிறது.
குழந்தைகளுக்கு, 103, 104 டிகிரி பாரன்ஹீட் வரை உடல் வெப்பநிலை உள்ளது. நுரையீரல் சார்ந்த தொற்றுகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
தொற்று பாதிக்கப்பட்டவர் வீட்டில் இருந்தால், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க, அவரை தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் கடைப்பிடித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.