/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்கதிர்பூரில் வீணாகும் இயற்கை உரக்கூடம்
/
மேல்கதிர்பூரில் வீணாகும் இயற்கை உரக்கூடம்
ADDED : டிச 22, 2024 12:11 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஊராட்சியில், நான்கு ஆண்டுகளுக்கு முன், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், ஒரு லட்சம் ரூபாய் ரூபாய் செலவில் மண்புழு இயற்கை உரம் தயாரித்தல் கூடம் அமைக்கப்பட்டது.
இதில், மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து அதனை பதப்படுத்தி, மண்புழு உரம் உற்பத்தி செய்ய, கான்கிரீட் தொட்டிகள் மற்றும் கீற்று கொட்டகை அமைக்கப்பட்டது.
ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என, இரு வகையாக தரம் பிரித்து, வருவாய் ஈட்ட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதில், கிடைக்கும் வருவாயில், துாய்மை பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் பிற ஊராட்சியின் பிற செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மேல்கதிர்பூர் ஊராட்சியில், ஒரு சில ஆண்டு மட்டுமே பயன்பாட்டில் இருந்த மண்புழை இயற்கை உரக்கூடம், முறையான பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள் புதர்போல மண்டி உரம் தயாரித்தல் கூடத்தின் கூரை சிதிலமடைந்து பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, மேல்கதிர்பூர் ஊராட்சியில், உரம் தயாரிக்கும் கூடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.