/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அந்துமணியின் நுால்கள் புத்தகக் காட்சியில் வெளியீடு
/
அந்துமணியின் நுால்கள் புத்தகக் காட்சியில் வெளியீடு
அந்துமணியின் நுால்கள் புத்தகக் காட்சியில் வெளியீடு
அந்துமணியின் நுால்கள் புத்தகக் காட்சியில் வெளியீடு
ADDED : ஜன 06, 2025 07:41 AM

சென்னை : சென்னை புத்தகக் காட்சியில், அந்துமணி எழுதிய, 'பார்த்தது கேட்டது படித்தது பாகம் - 23' உள்ளிட்ட 48 நுால்களை, மணிமேகலை பிரசுரம் நேற்று வெளியிட்டது.
சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., புத்தகக் காட்சி அரங்கில், 48 நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. 'தினமலர்' நாளிதழின் இணைப்பான, 'வாரமலர்' இதழில், அந்துமணி எழுதிய, பா.கே.ப., என்ற, 'பார்த்தது கேட்டது படித்தது' நுாலின் - 23ம் பாகத்தை, 'குமுதம்' இதழின் அதிபர் ஜவஹர் பழனியப்பன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மா.கருணாநிதி எழுதிய, 'மக்களை நேசிக்க பயிற்சி பெறுங்கள்' என்ற நுாலை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட, நடிகை தேவயானி பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, 'தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் -பாகம் - 9' உள்ளிட்ட நுால்கள் வெளியிடப்பட்டன. திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பனுக்கு, 'தமிழ்வாணன் விருது' மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.
இதில், நீதிபதி மஞ்சுளா பேசுகையில், ''இங்கு நடிகர் - நடிகையர், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். நான் நீதிபதியாக பங்கேற்றுள்ளேன். நீதி என்பதற்கு, தமிழில் அறம் என்று பொருள். அறத்தைப் போதிப்பதே நம் தமிழ் இலக்கியங்கள். இந்த நுால்களை படிப்போரும் அறத்தின் வழி நடக்க வேண்டும்,'' என்றார்.
அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ''நான் சிறுவனாக இருந்த போது, மணிமேகலை பிரசுரத்தை உருவாக்கிய, தமிழ்வாணன் எழுதிய, 'சங்கர்லால் துப்பறிகிறார்' நாவலை தொடர்ந்து படிப்பேன். என் பெயரில் சங்கர் இருப்பதால், அந்த கதை நாயகனாக என்னை கற்பனை செய்து கொள்வேன். அப்படி வாசகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தமிழ்வாணன்,'' என்றார்.
சஞ்சீவி ராஜா சுவாமிகள் பேசுகையில், ''திருவாசகத்தை மனப்பாடம் செய்வதால் பலன் கிடைக்காது. அதை உணர்ந்து படித்து, கடைப்பிடித்தால் பலன் கிடைக்கும். இந்த நுால் வெளியீடும் அப்படிப்பட்டதே,'' என்றார்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசுகையில், ''நுால்கள் எழுதுவோருக்கு, அவற்றை எப்படி வெளியிட வேண்டும் என்பது தெரியாது. மணிமேகலை பிரசுரம், அவர்களை கண்டறிந்து, அவர்களிடம் உள்ள எழுத்துக்களை பெற்று, நுாலாக்கி வாசகர்களுக்கு வழங்குகிறது. பெரும்பாலான நுாலாசிரியர்கள், தங்களின் நுால்களில், ஆங்கில எழுத்தாளர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவர். இனி, அப்படி செய்யாதீர்கள். நம் மொழியில் கருத்துக்களுக்கு பஞ்சமில்லை. அதனால், நம் எழுத்தாளர்களை மேற்கோள் காட்டுங்கள். குழந்தைகளையும் படிக்க வைக்கும் வகையில், புத்தகங்களில் இருந்து கேள்விகளை கேளுங்கள். இதனால், அவர்கள் துாண்டப்படுவர்,'' என்றார்.
நிகழ்ச்சியில், 'குமுதம்' இதழின் அதிபர் ஜவஹர் பழனியப்பன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, திரைப்பட இயக்குனர்கள், வாசு ஆர்.சுந்தர்ராஜன், நடிகை தேவயானி, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிவகுமார், திருநாவுக்கரசு, இயக்குனர் ராஜகுமாரன், கவிஞர் விசாலி கண்ணதாசன், பாடகர் டி.கே.எஸ்.கலைவாணன், நடிகர் மோகன்ராம், நடிகை குமாரி சச்சு, மணிமேகலை பிரசுரத்தின் ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன், நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.