/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனம் திருந்திய பெண்ணுக்கு ஆட்டோ
/
மனம் திருந்திய பெண்ணுக்கு ஆட்டோ
ADDED : மார் 31, 2025 02:38 AM

படப்பை,:தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படப்பை அருகே, மாடம்பாக்கம் ஊராட்சி, குத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 42. இவரின் மனைவி ஸ்டெல்லா மேரி, 40.
இரண்டு கால்கள், ஒரு கை செயலிழந்த மாற்றுத்திறனாளியான ஸ்டெல்லா மேரி, குடும்ப கஷ்டத்திற்காக, கணவருடன் சேர்ந்து டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி, அவற்றை கள்ளச்சந்தையில் வீட்டிலேயே வைத்து விற்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார், ஸ்டெல்லா மேரியை எச்சரித்தனர். அதன் பின், மது பாட்டில் விற்பதை நிறுத்தி திருந்தி வாழ்ந்தார்.
வருமானமின்றி, தனது குடும்பம் கஷ்டப்படுவதாக, மணிமங்கலம் காவல் நிலைய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் மதுசூதனிடம், ஸ்டெல்லா மேரி முறையிட்டார்.
இதையறிந்த மணிமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அசோகன், திருந்தி வாழும் ஸ்டெல்லா மேரியின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மணிமங்கலம் காவல் நிலையம் சார்பில், 50,000 ரூபாய் முன்பணம் செலுத்தி, புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி, அதை ஸ்டெல்லா மேரி, சுரேஷ் தம்பதியிடம் வழங்கினார்.