/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கோவிலில் வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி
/
காஞ்சி கோவிலில் வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி
காஞ்சி கோவிலில் வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி
காஞ்சி கோவிலில் வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி
ADDED : ஆக 13, 2025 01:59 AM
சென்னை: காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோவிலில், வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோவிலில், பிரசாத கடை நடத்துவதற்கான ஏலம் குறித்த அறிவிப்பு, கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில், ஏலத்தில் பங்கேற்க வைணவ பிராமணர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது என்ற நிபந்தனை இடம்பெறவில்லை எனக் கூறி, சென்னை மாம்பலத்தைச் ஏர்ந்த ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், 'பல ஆண்டு களாக வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்தி வருகின்றனர். அந்த நடைமுறையே தொடர வேண்டும்.
'கடந்த 2002ம் ஆண்டு வைணவ பிராமணர் அல்லாத நபருக்கு பிரசாத கடை நடத்த உரிமம் வழங்கப்பட்டதால், அவர் ஆகம விதிகளுக்கு முரணாக, வெங்காயம், பூண்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தப்பட்டது' என குறிப்பிடப்பட்டது.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''பிரசாத கடை ஏலம் விடும் விஷயத்தில், கோவில் ஆகம விதிகள் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, பிரசாத கடை ஏல அறிவிப்பில், 'கோவிலின் மரபு, ஆகமங்கள் தெரிந்திருக்க வேண்டும். வைணவ கோவில் பிரசாத தயாரிக்கும் முறையில், ஐந்து ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, இன்று நடைபெற உள்ள ஏலத்துக்கு தடையில்லை' என உத்தரவிட்டு, மனு தள்ளுபடி செய்தார்.
மேலும், வைணவர்கள் என்பது, பிராமணர்களை மட்டுமல்ல, பெருமாளை வணங்கும் அனைவரையும் குறிக்கும் என்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது.
எனவே, தேவராஜ சுவாமி கோவிலில், வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.