/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் கைது
/
சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் கைது
ADDED : ஜன 30, 2026 06:24 AM
ஸ்ரீபெரும்புதூர்: தொழிலாளர் நலன் துறை அமைச்சரை சந்தித்து மனு வழங்க, தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயன்ற, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் 87 பேரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடத்தில் உள்ள, 'என்.எஸ்.கே. பேரிங்ஸ்' எனும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், 207 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் சில மாதங்களுக்கு முன், 116 தொழிலாளர்களுடன் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் துவங்கப்பட்டது.
இந்த நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, பெரும்பான்மையாக உள்ள சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்துடன் தொழிற்சாலை நிர்வாகம் பேச்சு நடத்த வேண்டும் என, சி.ஐ.டி.யு., தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் துறை ஆணையர் வழங்கிய உத்தரவுப்படி, பெரும்பான்மை தொழிற்சங்கத்துடன், தொழிற்சாலை நிர்வாகம் பேச்சு நடத்த வேண்டும்.
என்.எஸ்.கே., தொழிற்சாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரகடம் மேம்பாலம் அருகே சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டடோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து, அங்கிருந்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தொழிலாளர் நலன் துறை அமைச்சரிடம் மனு கொடுக்க நடைபயணம் செல்ல முயன்றனர்.
ஒரகடம் போலீசார், நடைபயணம் செல்ல முயன்ற, தொழிலாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் 87 பேரை கைது செய்து, வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

