ADDED : ஜன 21, 2024 11:46 PM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியத்தின் கிராம ஊராட்சி பகுதிகளில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார்.
களியனுார் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படும் சிறுவர்களுக்கான கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, களியனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்படும் மாணவியர் கழிப்பறை மற்றும் ஊராட்சியில் குடிநீர் திட்ட பணிகள், அணுகு சாலை பணி போன்றவற்றை பார்வையிட்டார்.
களியனுாரில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 8 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் பொதுக்குளத்திற்கான பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, முத்தியால்பேட்டை, வள்ளுவபாக்கம், திம்மையன்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் கீதா, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.