ADDED : பிப் 27, 2024 06:32 AM

சேதமடைந்த மின்கம்பம்
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் இருந்து, மாத்துார் மயானத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் சிமென்ட் காரை உதிர்ந்து இரும்பு கம்பி வெளியில் தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால், அவ்வழியாக செல்வோர் அச்சப்படுகின்றனர். எனவே, விபத்து ஏற்படும் முன், மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
- எம். முருகன், மாத்துார்.
பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை
உத்திரமேரூர் - எல்.எண்டத்துார் சாலையில், மணித்தோட்டம் கிராம பேருந்து நிறுத்தத்தில், 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது. இங்கு மணித்தோட்டம், புலியூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் காத்திருந்து, பேருந்தில் பயணித்து வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், பயணியர் நிழற்குடை சேதமடைந்து, சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.
இதனால், ஆபத்தான நிலையில் உள்ள நிழற்குடையில் காத்திருக்க பயணியர் அச்சப்படுகின்றனர்.
எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, இருக்கை வசதியுடன் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.எஸ்.ஸ்ரீநிவாஸ்,
உத்திரமேரூர்.
குப்பை நிறைந்த மஞ்சள்நீர் கால்வாய்
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் செல்லும் மஞ்சள்நீர் கால்வாய், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாரப்பட்டது.
மாநகராட்சிக்கு உட்பட்ட ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு அருந்ததியர்பாளையம் பகுதியில் துார்வாரியபோது, கால்வாய் ஓரம் போடப்பட்ட குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளது.
இதனால், தற்போது அப்பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ஆனந்தாபேட்டை பகுதியில் மஞ்சள்நீர் கால்வாய் உட்புறம் மற்றும் ஓரம் சேர்ந்துள்ள குப்பை குவியலை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.
