/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஜனநாயகம்... பறிப்பு!:தொழிற்சாலை அனுமதி இனி கலெக்டருக்கு
/
உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஜனநாயகம்... பறிப்பு!:தொழிற்சாலை அனுமதி இனி கலெக்டருக்கு
உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஜனநாயகம்... பறிப்பு!:தொழிற்சாலை அனுமதி இனி கலெக்டருக்கு
உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஜனநாயகம்... பறிப்பு!:தொழிற்சாலை அனுமதி இனி கலெக்டருக்கு
ADDED : டிச 21, 2024 11:53 PM

காஞ்சிபுரம்:புதிதாக துவங்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த அதிகாரம் கலெக்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. அனுமதி வழங்க லட்ச கணக்கில் 'கட்டிங்' பெற்று வந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இதில், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், ஒரடகம் என, அழைக்கப்படும் சென்னகுப்பம், பிள்ளைப்பாக்கம், வல்லம், வடகால் உள்ளிட்ட ஏழு சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்படுகின்றன.
இந்த தொழில் பூங்காங்களில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இதுதவிர, தொழிற்சாலைகள் விரிவுபடுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு தொழிற்சாலை துவக்கம் மற்றும் விரிவாக்க பணிக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்படும் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றிய பின், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
தொழிற்சாலை அனுமதி பெறுவதற்கு, சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவர், அந்தந்த ஒன்றியக்குழு சேர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு கணிசமான தொகை கைமாறி வந்தன.
ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலை நிர்வாகங்கள் மற்றும் புதிதாக தொழில் துவங்கும் தனியார் நிறுவனங்கள், அரசியல்வாதிகளுக்கு கட்டிங் கொடுக்கவும் தயக்கம் காட்டுவதில்லை.
இந்நிலையில் கடந்த நவம்பரில் அரசு திருத்திய புதிய அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. இதில், ஊராட்சிகளில் தனியார் தொழிற்சாலைகள் துவங்குவதற்கு, இனி ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு கூட்டத்தின் தீர்மானம் பெறத்தேவையில்லை.
அதற்கு பதிலாக, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முறையாக கண்காணித்த பின்பே, தொழிற்சாலை துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தனியார் தொழிற்சாலைகள் அனுமதி மற்றும் விரிவுபடுத்தும் பணிக்கு லட்ச கணக்கில் கட்டிங் பெற்று வந்த, ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு தலைவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது. இனி அவர்களின் அனுமதி மற்றும் ஒப்புதல் தேவையில்லை.
இது சொகுசு வாழ்க்கை வாழும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:
தனியார் தொழிற்சாலைகள் துங்குவதற்கு முன், அந்தந்த ஊராட்சிகள் மற்றும் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் வைத்து கொடுத்து வந்தோம். கிராம மக்களுக்கு நன்மை தீமைகள் என, ஆராய்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, இது ஒரு அங்கீகரமாக இருந்தது.
தற்போதைய அரசாணையால், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளது. இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எளிமையாகும்
புதிய தொழிற்சாலைகள் துவங்குவது மற்றும் விரிவுபடுத்தும் அனுமதிக்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என, புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது, தொழிற்சாலைகள் துவங்கும் அனுமதிக்கு எளிமையாகும்.
கலைச்செல்வி,
கலெக்டர், காஞ்சிபுரம்.