நாய்கள் தொல்லையால் தபால் வினியோகிப்பதில் சிக்கல்
நாய்கள் தொல்லையால் தபால் வினியோகிப்பதில் சிக்கல்
ADDED : மார் 23, 2026 11:03 PM
காஞ்சிபுரம்:கிராமப்புறங்களில், நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும் பகுதிக்கு, தபால் டெலிவரி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் இரண்டு தலைமை தபால் நிலையங்கள், 56 துணை அஞ்சல் நிலையங்கள், 272 கிளை தபால் நிலையங்கள் என, 392 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொடர் வைப்பு கணக்கு, முதியோர் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு, 4 சதவீத வட்டியில் இருந்து, வாடிக்கையாளர்கள் எடுக்கும் திட்டங்களுக்கு ஏற்றவாறு, 8.5 சதவீதம் வட்டி வரை, அஞ்சல் துறை வழங்கி சேமிப்பு கணக்குகள் துவக்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
வருவாய் இல்லாத காஞ்சிபுரம் கச்சேரி, பிள்ளையார்பாளையம், பட்டுநுால்சத்திரம், திருத்தணி கிழக்கு ஆகிய நான்கு துணை அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, வருவாய் மற்றும் தபால் வினியோக பயன்பாட்டில் இருக்கும், 272 தபால் நிலையங்களில் அஞ்சல் வினியோகத்தில் சொதப்பல் உள்ளது.
குறிப்பாக, தபால் வினியோகம் செய்யும் நபர்கள் கிராமப்புறங்களில் செல்லும் போது, நாய், ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளால் இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, தெரு நாய்கள் தொல்லையால், தபால் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களில், சம்பந்தப்பட்டவரின் மொபைலில் தொடர்பு கொண்டு தபால் டெலிவரி செய்யுங்கள். இல்லை எனில், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என, கூறியதாக அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
