/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறு, செய்யாற்றில் ஆழ்துளை கிணறு மூலம்...குடிநீர் திருட்டு: கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
/
பாலாறு, செய்யாற்றில் ஆழ்துளை கிணறு மூலம்...குடிநீர் திருட்டு: கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
பாலாறு, செய்யாற்றில் ஆழ்துளை கிணறு மூலம்...குடிநீர் திருட்டு: கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
பாலாறு, செய்யாற்றில் ஆழ்துளை கிணறு மூலம்...குடிநீர் திருட்டு: கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
ADDED : மே 10, 2025 01:37 AM

காஞ்சிபுரம்:பாலாறு மற்றும் செய்யாறு ஆற்றுப்படுகைகளில், முறைகேடாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை கண்காணித்து தடுக்க வேண்டிய நீர் வள துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கோடை காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியாக, 222 கி.மீ., துாரம் கடந்து கடலில் கலக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் துவங்கும் செய்யாறு காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக கடலில் கலக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கிளை நதியான வேகவதி ஆறு, பல்வேறு மாவட்டங்கள் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடலில் கலக்கிறது.
முறைகேடு
இந்த மூன்று ஆறுகளும் விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீராதாரம் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட நீராதாரமாகவும் திகழ்கிறது.
குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், பாலாற்றுப் படுகைகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன.
பாலாறு ஒட்டி வாலாஜாபாத், அவளூர், திம்மராஜம்பேட்டை, வில்லிவலம், காலுார், பெரியநத்தம் மற்றும் செய்யாற்றில் காவாந்தண்டலம், திருமுக்கூடல், பினாயூர் ஆகிய பகுதிகளில் ஆறு ஒட்டிய பகுதிகளில் முறைகேடாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர்.
ஒரு சிலர், வர்த்தக பயன்பாட்டிற்காக, சில இடங்களில் பாலாற்றின் நடுவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின்சாரம் மற்றும் டீசல் இயந்திரங்களின் வாயிலாக தண்ணீரை உறிஞ்சி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதை கண்காணித்து தடுக்க வேண்டிய நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள், அதை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கோரிக்கை
இதே நிலை நீடித்தால், பாலாறு ஒட்டி செயல்படும் கூட்டு குடிநீர் திட்டத்தில் தினசரி உறிஞ்சப்படும் 1.5 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என, கூட்டு குடிநீர் திட்டத்தினர் புலம்பி வருகின்றனர்.
எனவே, பாலாற்றில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு 'சீல்' வைக்க, நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தில், மத்திய அரசின் நீர் ஆணையம் அலுவலகம் இயங்கி வந்தது.
இந்த ஆணைய அலுவலகத்தின் வாயிலாக ஏரிகளுக்கு தண்ணீர் பகிர்ந்தளிப்பு மற்றும் தண்ணீர் திருட்டு தடுக்கப்பட்டு வந்தது. இந்த ஆணைய அலுவலகம் தற்போது முடங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு நபர்கள் முறைகேடாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
செய்யாறு, வேகவதி ஆறு, பாலாறு ஆகிய ஆற்று பகுதிகளில், முறைகேடாக அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறுகளை அகற்றுவதற்கு நீர் வள ஆதாரத்துறையினருக்கு அதிகாரம் இல்லை.
ஒத்துழைப்பு
வருவாய், காவல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முறைகேடான ஆழ்துளை கிணறுகளை அகற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையைச்சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு விபரத்தை வருவாய் துறையினர் கணக்கெடுத்து வருகிறோம். பொதுப்பணி துறையினருடன் சேர்ந்து விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.