ADDED : செப் 04, 2026 04:51 PM

காஞ்சிபுரம்: திருக்காலிமேடு வடக்கு மாட வீதியில், பாதாள சாக்கடை திட்ட பணியால் சேதமான சாலையை, மாநகராட்சி சார்பில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், மண் கரைந்து சகதியாக மாறியதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம், திருக்காலிமேடு வடக்கு மாட வீதியில், இரு மாதங்களுக்கு பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது.
இப்பணி முடிந்த பின், சேதமான சாலையை கான்கிரீட் கலவை மூலம் முறையாக சீரமைக்கவில்லை. இதனால், மேடு, பள்ளமாக இருந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். எனவே, சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த வாரம் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில், மாநகராட்சி சார்பில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் பெய்த மழையால் மண் கரைந்து, சகதியாக மாறியுள்ளது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, திருக்காலிமேடு வடக்கு மாட வீதியில், சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
