/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிவிரைவு சாலை ஒப்பந்ததாரருக்கு நிதி நெருக்கடி
/
அதிவிரைவு சாலை ஒப்பந்ததாரருக்கு நிதி நெருக்கடி
UPDATED : ஆக 01, 2024 08:14 AM
ADDED : ஆக 01, 2024 01:25 AM

காஞ்சிபுரம்,:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி, இந்த மாத இறுதியில் முடிக்க வேண்டிய நிலையில், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் நிதி நெருக்கடியால் திணறி வருகிறது. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என, ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில், கட்டுமான பணிகள் நடக்க வாய்ப்பு உள்ளன.
சென்னையில் இருந்து பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டே வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட உள்ளன.
இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம்.
இந்த சாலை போடும் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு, 2012ம் ஆண்டு சிவன்கூடல், மொளச்சூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி, நெமிலி, பாணாவரம் ஆகிய கிராமவாசிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடத்தினர்.
அடுத்த கட்டமாக, 2016ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தினர்.
அதிவிரைவு சாலை விரிவாக்கப் பணிக்கு, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதில், 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
புலம்பல்
அதிவிரைவு சாலைக்கு, புதிய சாலை போடுவதற்கு, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்தனர்.
முதற்கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மேபொடவூர், மணியாட்சி, கோவிந்தாவடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றன.
இதையடுத்து, உயர் மட்ட பாலங்கள் மற்றும் அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை போடும் பணியை, அந்தந்த சாலை போடும் ஒப்பந்தம் எடுத்துவர்கள் செய்து வருகின்றனர்.
சித்துார் - ராணிப்பேட்டை வரை, ராணிப்பேட்டை - காஞ்சிபுரம் வரை, காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதில், 51.07 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளன.
இதில், ஏரிகளில் சாலை போடும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன.
உதாரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, மடப்புரம் ஆகிய பல்வேறு ஏரிகளில், பில்லர் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.
இந்த மாத இறுதியில் முடிக்க வேண்டிய சாலை போடும் பணியை, நிதி நெருக்கடியால் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் திணறி வருகிறது.
இதனால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என, ஊழியர்கள் தரப்பில் புலம்பல் எழுந்துள்ளது.
நடவடிக்கை
இதுதவிர, தென்மேற்கு பருவ மழையால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வடகிழக்கு பருவ மழையும் துவங்க உள்ளது.
இதனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில், கட்டுமான பணிகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க அதிகாரிகள் கூறியதாவது:
மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி செய்ய வேண்டி உள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், ஏரி மற்றும் ஏரி ஒட்டிய பகுதிகளில், இயந்திரங்களை இயக்க முடியவில்லை.
இதனால், மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், நிறைவு செய்த பணிகளுக்கு ஏற்ப, நிதி விடுத்து வருகிறோம். வேறு ஒன்றும் இல்லை. முடிந்த வரையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.