/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொறியாளர் - திமுக கவுன்சிலர் தம்பதி சொத்து குவித்தது எப்படி? தேர்தல் வேட்புமனுவால் போலீசில் மாட்டியது அம்பலம்!
/
பொறியாளர் - திமுக கவுன்சிலர் தம்பதி சொத்து குவித்தது எப்படி? தேர்தல் வேட்புமனுவால் போலீசில் மாட்டியது அம்பலம்!
பொறியாளர் - திமுக கவுன்சிலர் தம்பதி சொத்து குவித்தது எப்படி? தேர்தல் வேட்புமனுவால் போலீசில் மாட்டியது அம்பலம்!
பொறியாளர் - திமுக கவுன்சிலர் தம்பதி சொத்து குவித்தது எப்படி? தேர்தல் வேட்புமனுவால் போலீசில் மாட்டியது அம்பலம்!
ADDED : அக் 23, 2024 07:23 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலும், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும், நீர்வளத் துறையின் உதவி பொறியாளராக பல ஆண்டுகளாக, காஞ்சிபுரம் ஆட்டுப்புத்துார் கிராமத்தைச் சேர்ந்த குஜராஜ், 45, என்பவர் பணியாற்றி வந்தார். இப்போது, செங்கல்பட்டு நீர்வளத்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இவர் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், இவரை, பல ஆண்டுகளாகவே போலீசார் கண்காணித்து வந்தனர்.
கடந்த 2016 முதல், 2021ம் ஆண்டு வரையிலான, தொடர் கண்காணிப்பின்போது, குஜராஜ் மற்றும் அவரது மனைவியும், தி.மு.க., மாவட்ட கவுன்சிலருமான ராஜலட்சுமி, 38, தாய் தமிழரசி, 77, அக்கா ராஜேஸ்வரி, 58, ஆகியோரது வருமானம் பல மடங்கு உயர்ந்திருப்பது தெரியவந்தது. அதன்படி, வருமானத்துக்கு அதிகமாக, 3.98 கோடி ரூபாய் கூடுதலாக சம்பாதித்தது தெரியவந்துள்ளது.
இதனால், நான்கு பேர் மீதும், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2016ம் ஆண்டு முதல், குஜராஜ் வாங்கும் சொத்துக்களை கண்காணித்து வந்தாலும், 2021ல், அவரது மனைவி ராஜலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2வது வார்டில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட தாக்கல் செய்த தேர்தல் வேட்புமனுவில், மொத்த சொத்து விபரங்களையும் புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விபரங்களில், எந்தெந்த ஊரில், எத்தனை ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது எனவும், தன் பெயரிலும், கணவர் குஜராஜ் பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துக்களை ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வேட்புமனுவில், குஜராஜுக்கு, 61 லட்சம் ரூபாய் அசையும் சொத்துக்கள், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ராஜலட்சுமி பெயரில், 75 லட்ச ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 3.41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சுயமாக வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சந்தை மதிப்பாக, 7.17 கோடி ரூபாய் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுயமாக சம்பாத்தியம் செய்த சொத்துக்கள், 2016 முதல், 2021ம் ஆண்டு வரையிலானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கிலான இந்த சொத்துக்கள், குஜராஜ் அரசு பணியில் சேர்ந்த பிறகே வாங்கி குவிக்கப்பட்டிருப்பது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று, குஜராஜின் தாயார், அக்கா ஆகியோரது சொத்துக்கள் என, பல்வேறு தகவல்களை திரட்டிய பிறகே, போலீசார் 4 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

