/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனைவியை கொல்ல முயற்சி கணவனுக்கு 5 ஆண்டு சிறை
/
மனைவியை கொல்ல முயற்சி கணவனுக்கு 5 ஆண்டு சிறை
ADDED : பிப் 22, 2024 11:28 PM
சென்னை, சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல், 32. கடந்த 2008ல், திருமணம் செய்த மணிவேலுக்கு, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது.
மணிவேலின் தீயப் பழக்கங்களை விரும்பாத மனைவி, கணவரை பிரிந்து திருவல்லிக்கேணியில் உள்ள தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். மகனும் தீய பழக்கத்துக்கு அடிமையானதால், அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார்.
மணிவேல், 2022 செப்.,2ல், திருவல்லிக்கேணி சென்று மனைவியுடன் சண்டையிட்டு உள்ளார்.
அப்போது, திடீரென கத்தியால் மனைவியை பல இடங்களில் குத்தினார். படுகாயம் அடைந்த அவரது மனைவி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மனைவி அளித்த புகாரின்படி, மணிவேலை கைது செய்த அண்ணாசாலை போலீசார், வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை, அல்லிக்குளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மணிவேல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
'அபராதத் தொகையில், 4,000 ரூபாயை மணிவேலின் மனைவிக்கு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீட்டு தொகையை பெற்று தர, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.