நிலத்தடி நீருடன் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு!: அம்மோனியா, பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் அதிகரிப்பு போர்வெல் தண்ணீர் நுரைத்து வருவதால் மக்கள் அச்சம்
நிலத்தடி நீருடன் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு!: அம்மோனியா, பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் அதிகரிப்பு போர்வெல் தண்ணீர் நுரைத்து வருவதால் மக்கள் அச்சம்
UPDATED : செப் 13, 2026 06:04 PM
ADDED : செப் 13, 2026 06:02 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில், பாதாள சாக்கடை குழாய்கள் சேதமடைந்து, கழிவுநீர் நிலத்தடி நீருடன் கலப்பதால், அம்மோனியா, பாஸ்பேட் உள்ளிட்ட ரசாயனங்களின் அளவு அதிகரித்து வருகிறது. சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள வாழை முனுசாமி நகர், அம்மங்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து கழிவுநீர் கசிவதாகவும், இந்த கழிவுநீர் நிலத்தடியில் ஊறி, அப்பகுதியில் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த பிரச்னை 29வது வார்டுக்கு மட்டுமல்லாமல், சின்னகாஞ்சிபுரம் பகுதியில் சாய தொழிற்சாலைகள் செயல்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்வதாக கூறப்படுகிறது. அதேபோல, பாதாள சாக்கடை குழாய்கள் சேதமடைந்த பகுதிகளிலும் இப்பிரச்னை நீடிக்கிறது.
கழிவுநீர் கசிவதும், அது நிலத்தடி நீருடன் கலப்பதும் தொடர்ந்து நடப்பதாக, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் பிடித்து வரும் அப்பகுதி மக்களுக்கு, அதன் தரம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
போர்வெல் தண்ணீர் பிடிக்கும் போது நுரையுடன் வருவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், மாநகராட்சியின் 29வது வார்டு கவுன்சிலர் குமரன், கடந்த மாதம் அப்பகுதியில் இருந்து நிலத்தடி நீர் மாதிரியை சேகரித்து, பரிசோதனைக்காக குடிநீர் வாரியத்திடம் அனுப்பினார்.
இந்த பரிசோதனையில், நிலத்தடி நீரில் அம்மோனியா, பாஸ்பேட் உள்ளிட்ட தனிமங்களின் அளவு, இயல்பான அளவை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் நீரில் அம்மோனியா அளவு 0.5 மி.கி., வரையிலும், பாஸ்பேட் அளவு 1 மி.கி., வரையிலும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பரிசோதனை செய்யப்பட்ட நீரில் இவற்றின் அளவு, 5 மி.கி., வரை இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாதாள சாக்கடை குழாய்கள் எந்தெந்த இடங்களில் சேதமடைந்துள்ளன என்பதை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கழிவுநீர் கசிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, குழாய்களை சீரமைப்பதுடன், நிலத்தடி நீரின் தரத்தையும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நிலத்தடி நீர் எந்தளவு மாசடைந்துள்ளது என்பதை மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம் ஆகிய துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கவுன்சிலர் குமரன் கூறியதாவது:
எங்கள் பகுதியில் பலரும் போர்வெல் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது நுரையுடன் தண்ணீர் வந்ததால், தண்ணீரை பரிசோதனை செய்தோம். அதில், தண்ணீர் மாசடைந்து இருப்பது அறிக்கையாகவே குடிநீர் வாரியம் கொடுத்துவிட்டது.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில், பாதாள சாக்கடை குழாய்கள் அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. அதனால், பாதாள சாக்கடை கழிவுநீர், மூன்று ஆண்டுகளாகவே நிலத்தில் ஊறுகிறது. அதனால், நிலத்தடி நீரும் பாதிக்கிறது.
இப்பகுதி மக்கள், 40 - 50 அடி கொண்ட போர்வெல் அமைத்துள்ளனர். தண்ணீர் மாசடைந்துள்ளதால், சிலர் 100 - -150 அடி வரை போர்வெல் அமைக்கின்றனர். இதுகுறித்து, அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி கூட்டத்திலும் பேசிவிட்டேன். குழாய்களை மாற்றினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
