/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செய்யாறு அணை சீரமைப்புக்கு நிதி ஒதுக்குவதில்... பாராமுகம் !
/
செய்யாறு அணை சீரமைப்புக்கு நிதி ஒதுக்குவதில்... பாராமுகம் !
செய்யாறு அணை சீரமைப்புக்கு நிதி ஒதுக்குவதில்... பாராமுகம் !
செய்யாறு அணை சீரமைப்புக்கு நிதி ஒதுக்குவதில்... பாராமுகம் !
ADDED : ஜூலை 16, 2024 12:56 AM

காஞ்சிபுரம் செய்யாற்றில் சேதமடைந்த அணைக்கட்டை சீரமைக்கவும், காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் தடுப்பு சுவர் கட்டவும், 17 கோடி ரூபாயை, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், தமிழக அரசு செவி சாய்க்காததால், இதுவரை நிதி கிடைக்காமல் உள்ளது. இதனால், நடப்பாண்டும் 2,000 ஏக்கர் பாசன வசதியுள்ள காவாந்தண்டலம் ஏரியை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. பருவமழையை எதிர்பார்த்து பெரும்பாலான ஏரிகளும், விவசாய நிலங்களும் காத்திருக்கின்றன.
ஆனால், மாகரல் கிராமம் அருகே, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தரும் காவாந்தண்டலம் ஏரிக்கு இந்த ஆண்டும் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காவாந்தண்டலம் ஏரிக்கு, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், பக்கவாட்டு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
ஏரிக்கு தங்கு தடையின்றி தண்ணீரை கொண்டு செல்ல, 8 கோடி ரூபாய் மதிப்பில், வெங்கச்சேரி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே, 2017ல், புதிதாக அணைக் கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டின் ஷட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீர், நீர்வரத்து கால்வாய் மூலம், காவாந்தண்டலம் ஏரிக்கு சீராக செல்லும் வகையில் கட்டப்பட்டது.
கடந்த 2021ல் பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமானது.
கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே அணைக்கட்டின் அடிப்பகுதி சேதம் ஆனதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி கொட்டும் இடத்தில், கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளிக்கின்றன.
இதுமட்டுமல்லாமல், காவாந்தண்டலம் ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. ஏரிக்கு செல்லும் கால்வாயில் பெரிய அளவிலான துவாரங்கள் உள்ளன.
கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏரிக்கு செல்லும் தண்ணீர், மீண்டும் ஆற்றிலேயே வடிகிறது.
காவாந்தண்டலம் ஏரிக்கு புதிதாக கால்வாய் கட்டவும், சேதமான அணைக்கட்டை சீரமைக்கவும், தமிழக அரசிடம் மொத்தம் 17 கோடி ரூபாய் கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறையினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கருத்துரு அனுப்பி உள்ளனர்.
ஆனால், இதுவரை 17 கோடி ரூபாய்க்கான நிதி ஒதுக்கீடு வழங்காததால், கால்வாய் கட்டாமலும், அணைக்கட்டு சீரமைக்க முடியாமலும் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து நிதி கேட்டு வரும் நிலையில், இதுவரை தமிழக அரசு நிதி ஒதுக்காமல் உள்ளது.
கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், நீர்வளத் துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, செய்யாறு அணைக்கட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில், செம்பரம்பாக்கம் ஏரி சீரமைப்புக்கு மட்டும், 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதி ஒதுக்காததால், நீர்வளத் துறை அதிகாரிகள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அணைக்கட்டு சீரமைப்பு நிதி அரசு ஒதுக்கும் என, எதிர்பார்த்துள்ளோம். ஏற்கனவே, உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசியுள்ளார். நீர்வளத் துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி உள்ளார்.
அதிகாரிகளும் நிதி கேட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். விரைந்து நிதி ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். நிதி வந்தவுடன், கால்வாய் கட்டுவது, அணைக்கட்டு சீரமைப்பது போன்ற பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.