/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டைம் கீப்பர் அலுவலகம் அமைக்க காஞ்சிபுரம் பயணியர் எதிர்பார்ப்பு
/
டைம் கீப்பர் அலுவலகம் அமைக்க காஞ்சிபுரம் பயணியர் எதிர்பார்ப்பு
டைம் கீப்பர் அலுவலகம் அமைக்க காஞ்சிபுரம் பயணியர் எதிர்பார்ப்பு
டைம் கீப்பர் அலுவலகம் அமைக்க காஞ்சிபுரம் பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : டிச 28, 2024 01:04 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், உத்திரமேரூர், செய்யாறு, திருவண்ணாமலை, மதுராந்தகம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்துமிடத்தில், நகர பேருந்துகளுக்கான 'டைம் கீப்பர்' எனப்படும் நேரக் காப்பாளர் அலுவலகம், தகரத்தால் செய்யப்பட்ட 'பங்க்'கில் இயங்கி வந்தது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் நகர பேருந்துகள் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம் குறித்து பயணியர் அறிந்து வந்தனர்.
மேலும், பேருந்து நடையின்போது டிக்கெட் வசூல் தொகை உள்ளிட்ட விபரங்களை டிரைவர் மற்றும் நடத்துனர்கள் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், தகரத்தால் செய்யப்பட்ட 'பங்க்' கூரையிலும், அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டு, மழை நேரங்களில் ஒழுகியதால், ஆவணங்கள் நனைந்து சேதமாகின.
பங்க்கின் உட்புற தரைப்பகுதியில் ஓட்டை இருப்பதால் அதன் வழியாக பூரான், தேள், எலிகள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகுந்துவிடுவதால், நேரக் காப்பாளர் அலுவலகத்திற்கு வரும் டிரைவர்கள், கண்டக்டர்கள், பேருந்து குறித்த விபரம் கேட்க வரும் பயணியர் அச்சப்பட்டு வந்தனர்.
இதனால், ‛பங்க்' சீரமைப்பு பணிக்காக பேருந்து நிலைய பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், இரு மாதங்களுக்கு மேலாகியும் சீரமைப்பு பணி முடிந்து ‛டைம் கீப்பர்' அலுவலக பங்க் மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படவில்லை.
இதனால், நகர பேருந்து குறித்த விபரம் அறியவரும் பயணியர், டைம் கீப்பர் அலுவலகம் இயங்கிய இடம் காலியாக இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். இதனால், தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்தின் விபரம் அறிய முடியாமல் பரிதவிக்கின்றனர்.
எனவே, பயணியரின் நலன் கருதி, சீரமைப்பு பணிக்காக எடுத்துச் செல்லப்பட்ட டைம் கீப்பர் அலுவலக பங்கை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.