/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு நில எடுப்பு பணி... மும்முரம்:441 உரிமையாளர்களின் 566 ஏக்கர் நிலங்கள் பதிவு
/
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு நில எடுப்பு பணி... மும்முரம்:441 உரிமையாளர்களின் 566 ஏக்கர் நிலங்கள் பதிவு
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு நில எடுப்பு பணி... மும்முரம்:441 உரிமையாளர்களின் 566 ஏக்கர் நிலங்கள் பதிவு
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு நில எடுப்பு பணி... மும்முரம்:441 உரிமையாளர்களின் 566 ஏக்கர் நிலங்கள் பதிவு
ADDED : செப் 11, 2025 02:19 AM

காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இரு மாதங்களில், 441 நில உரிமையாளர்கள், தங்களது 566 ஏக்கர் நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கியுள்ளது. இதற்காக அவர்களுக்கு 284 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், 5,320 ஏக்கர் பரப்பளவில், பரந்துார் சுற்றியுள்ள, 20 கிராமங்களில் அமைய உள்ளது. இதில் 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. விமான நிலையம் திட்ட மதிப்பு 29,150 கோடி ரூபாய்.
பரந்துார் ஏ, பரந்துார் பி, தண்டலம், பொடவூர், தொடூர், நெல்வாய், வளத்துார், மடப்புரம், சேக்காங்குளம், ஆட்டுப்புத்துார், கூத்திரம்பாக்கம், சிறுவள்ளூர், காரை, அக்கமாபுரம், எடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கிலிபாடி, மதுரமங்கலம் ஆகிய 20 கிராமங்களில் இதற்கான நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.
இதில், 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும், பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன. பரந்துாரில் விமான நிலையம் அமைவதாக, அறிவிப்பு வெளியானது முதல், இத்திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராம மக்கள், பல கட்ட போராட்டங்களை 1,000 நாட்களை கடந்தும் நடத்தி வருகின்றனர்.
நோட்டீஸ்
திட்டத்தை எதிர்த்து போராட்டம் ஒருபுறம் நடக்கும் நிலையில், நில எடுப்பு பணிகளை வருவாய் துறை, 21 அலகுகளாக பிரிந்து, மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
நில உரிமையாளர்கள் 3,694 பேருக்கு, முதற்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், பரந்துார், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர், தங்கள் நிலங்களை, விமான நிலைய திட்டத்திற்காக ஜூலை 9ம் தேதி வழங்கினர்.
இதையும் சேர்த்து, கடந்த இரு மாதங்களில், 12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர், தங்களது 566 ஏக்கர் நிலங்களை, விமான நிலைய திட்டத்திற்கு வழங்கியுள்ளதாக, வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 444 ஏக்கர் நிலங்கள், தமிழக அரசின் நேரடி பேச்சு மூலம், நிலங்களை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு இழப்பீடாக, 284 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கி உள்ளது.
இழப்பீடு
இதுகுறித்து காஞ்சிபுரம் வருவாய் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விமான நிலைய திட்டத்தில் நில உரிமையாளர்களுக்கு மூன்று வகையில் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. நில எடுப்பு சட்டம், நேரடி பேச்சு மற்றும் நிலையான நில மதிப்பு என மூன்று வகையில் இழப்பீடு வழங்கப்படுகிறது.
இதில், நேரடி பேச்சு மற்றும் நிலையான நில மதிப்பு ஆகிய இரு முறைகளில், நில உரிமையாளர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும். தற்போது எடுக்கப்பட்ட 566 ஏக்கரில், 444 ஏக்கர் நிலங்கள், நேரடி பேச்சு மூலமாகவே நில எடுப்பு நடந்துள்ளது. நில உரிமையாளர்களுக்கு, அதிக இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
நிலங்களை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராம மக்களிடம் பேசி, அவர்களுக்கான இழப்பீடும் உரிய முறையில் வழங்கப்படும்.நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ஓராண்டுக்குள் பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.