/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு கேள்விக்குறி
/
பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு கேள்விக்குறி
பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு கேள்விக்குறி
பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜன 19, 2026 05:42 AM

சென்னை: கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை, தேசிய முதியோர் மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், அங்கு டாக்டர்கள், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோயாளியான தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, 2024 நவம்பரில் விக்னேஷ் என்ற வாலிபர், டாக்டர் பாலாஜியை கத்தியால் சரமாரியாக குத்திய கொடூரம் நடந்தது. தீவிர சிகிச்சை பெற்று, பாலாஜி உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அம்மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் காவல் நிலையம் துவக்கப்பட்டது.
அதன் அருகே, தேசிய முதியோர் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனை எதிரேயும், போலீஸ் பூத் துவக்கப்பட்டது.
போதிய போலீசார் இல்லை எனக்கூறி, இரண்டு புறக்காவல் நிலையங்களும் பல மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
டாக்டர் பலாஜி மீதான தாக்குதலுக்கு பின், மருத்துவமனையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவையெல்லாம் சில காலம் மட்டுமே இருந்தது. அதன்பின், பூட்டப்பட்ட மருத்துவமனை வளாக காவல் நிலையம் திறக்கப்படாமலேயே உள்ளது.
மருத்துவமனை வளாகத்திற்குள் யார் வந்தாலும், அவர்கள் எங்கே செல்கின்றனர் என கேட்கக்கூட பாதுகாப்பு பணியில் யாருமில்லை.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண்ணை பார்க்க சென்று, வார்டின் வெளியே துாங்கிய ரவுடியை, ஒரு கும்பல், கடந்த வாரம் கொலை செய்துவிட்டு தப்பியது.
அதுபோன்ற அசம்பாவி தம், இங்கேயும் நடந்தால்தான், இந்த இரண்டு மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பார்களா; அதற்குமுன் தடுக்க மாட்டார்களா என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிண்டி போலீசார் தரப்பில் கூறியதாவது:
காவல் நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறை உள்ளது. இப்பகுதி, விமான நிலையம் செல்லும் வழியாக இருப்பதால், கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரின் 'கான்வாய்'க்கு பாதுகாப்பு அளிக்க தேவையான போலீசார் பணியில் இல்லை.
இந்நிலையில், 24 மணி நேரமும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலை உள்ளது. கூடுதல் போலீசார் ஒதுக்கப்பட்டால், சுழற்சி முறையில் போலீசாரை நியமிக்கலாம். இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சம்பவத்தை தொடர்ந்து, ஒவ்வொரு மருத்துவமனையிலும் எஸ்.ஐ., தலைமையில், ஆறு போலீசார் பணியில் இருக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தர விட்டுள்ளார்.

