/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில்...முறைகேடு! :விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.1.74 கோடி ஆட்டை
/
காஞ்சி மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில்...முறைகேடு! :விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.1.74 கோடி ஆட்டை
காஞ்சி மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில்...முறைகேடு! :விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.1.74 கோடி ஆட்டை
காஞ்சி மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில்...முறைகேடு! :விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.1.74 கோடி ஆட்டை
ADDED : ஜூலை 23, 2024 10:41 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17.43 லட்சம் நெல் மூட்டைகளுக்கு வழங்க வேண்டிய, தலா 10 ரூபாய் என, மொத்தம், 1.74 கோடி ரூபாயை ஆளும்கட்சியினர் பங்கு போட்டுக் கொள்வதாக, விவசாய சங்கங்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், 9,388 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்தனர். விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு, தனியார் நெல் வியாபாரிகளை விட இரட்டிப்பாக நுகர்பொருள் வாணிப கழகத்தினர் விலை வழங்கியதால், பெரும்பாலான விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், 37 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பினர், 33 நேரடி கொள்முதல் நிலையம் என, மொத்தம், 70 நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த ஆக்டோபர் மாதம் முதல், ஜூலை மாதம் வரை நெல் கொள்முதல் செய்தனர்.
கடந்த ஆண்டு, ஒரு கிலோ சன்ன ரக நெல்லுக்கு, 23.10 ரூபாய் மற்றும் சாதாரண ரக நெல்லுக்கு, 22.60 ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 40 கிலோ எடை கொண்ட ஒரு நெல் மூட்டைக்கு, 924 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, 6.97 கோடி கிலோ நெல்லை நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்து உள்ளனர். இதை, 40 கிலோ எடை கொண்ட, 17.43 லட்சம் நெல் மூட்டைகளாக கட்டவாக்கம் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழத்தினர் சேமித்து வைத்து உள்ளனர்.
இதில், 40 கிலோ நெல் மூட்டை துாற்றி சுத்தம் செய்து, லோடு ஏற்றுவதற்கு, 10 ரூபாய் அரசு வழங்கப்பட்டு உள்ளது என, நுகர்பொருள் வாணிப கழகத்தினரே விவசாயி ஒருவருக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல் அடிப்படையில், 40 கிலோ அடங்கிய ஒரு மூட்டைக்கு, 10 ரூபாய் என கணக்கீடு செய்தால், 1.74 கோடி ரூபாய், 9388 நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் மூலமாக, பல்வேறு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்.
இதை, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் ஆசியுடன், அரசு மற்றும் கட்சி முக்கிய பொறுப்பில் இருப்போர் பங்கு போட்டுக் கொள்வதாக விவசாயிகள் சங்கங்கள் இடையே, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:
விவசாயிகளிடம் இருந்து, 40 கிலோ அடங்கிய ஒரு நெல் மூட்டைக்கு, 65 ரூபாய் வசூலித்துக் கொள்கின்றனர். இந்த பணத்தில் நெல் துாற்றுவதற்கும், ஏற்றுவதற்கும் கூலி வழங்குகிறோம் என, மையம் நடத்துவோர் கூறுகின்றனர்.
அரசு பணம் வழங்கும் போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கு தானே சென்றடைய வேண்டும். இதை, ஏன், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் யாரும் செய்வதில்லை.
மாறாக, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் உதவியுடன், ஆளும் கட்சியினர் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இனி வரும் காலங்களில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.