UPDATED : ஆக 22, 2026 09:23 PM
ADDED : ஆக 22, 2026 07:42 PM
குன்றத்துார்:மாங்காடில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் நகராட்சியினர் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
குன்றத்துார் அருகே மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு நாளொன்றுக்கு 20 டன் குப்பை கழிவுகள் சேகாரமாகின்றன. இந்த குப்பை கழிவுகள் நகராட்சி சார்பில் வாகனங்களில் சேகரித்து, மாங்காடு மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் கொட்டப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
இந்த சுடுகாட்டை மாங்காடு பகுதியில் உள்ள அனைத்து சமூதாய மக்களும் பயன்படுத்துகின்றனர். சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் சிலை உள்ளிட்ட அனைத்தும் இடத்திலும் குப்பை கொட்டி மூடப்பட்டுவிட்டன.
இதனால், இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் குப்பை கழிவுகளை அகற்றி அரிச்சந்திரன் சிலையை வழிபாடு செய்தபின் இறந்தவர் உடலை தீ வைத்து எரிக்கிறோம்.
மேலும், மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் தரம் பிரிக்காமல் ஓன்றாக கொட்டப்படுவதால் இங்கிருந்து வீசும் துர்நாற்றத்தால் அருகில் வசிக்கும் குடியிருப்பு மக்கள் வேதனைக்குள்ளாகின்றனர்.
சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
