/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்களுடன் அமைச்சர் நேரு... 'பஞ்சாயத்து!':மேயரை எதிர்த்து 20 பேர் ராஜினாமா செய்ய திட்டம்
/
காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்களுடன் அமைச்சர் நேரு... 'பஞ்சாயத்து!':மேயரை எதிர்த்து 20 பேர் ராஜினாமா செய்ய திட்டம்
காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்களுடன் அமைச்சர் நேரு... 'பஞ்சாயத்து!':மேயரை எதிர்த்து 20 பேர் ராஜினாமா செய்ய திட்டம்
காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்களுடன் அமைச்சர் நேரு... 'பஞ்சாயத்து!':மேயரை எதிர்த்து 20 பேர் ராஜினாமா செய்ய திட்டம்
ADDED : ஜூன் 18, 2024 11:42 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், மேயருக்கு எதிராக தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ள நிலையில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களை அழைத்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு சமாதானம் செய்து உள்ளார். போதிய முடிவு எட்டப்படாததால், 20 தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளனர். இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சு இன்று, மாவட்ட செயலர் சுந்தர் தலைமையில், காஞ்சிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமி உள்ளார். இந்நிலையில், ஒராண்டாகவே அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. மாநகராட்சி நிர்வாகத்தில் மேயர் கணவர் யுவராஜ் ஆதிக்கமும் அதிகமானதால், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
நெருக்கடி
இதற்கிடையே, பல பிரச்னைகள் நீடித்து வந்த நிலையில், மாநகராட்சி கூட்டத்திற்கு தி.மு.க.,- - அ.தி.மு.க., - சுயேட்., கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தனர். இதனால், தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல், மேயருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில்தான், மேயர் மகாலட்சுமி மீது, நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., கவுன்சிலர்கள் 17, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 7, பா.ம.க., கவுன்சிலர்கள் 2, காங்., துணை மேயர் குமரகுருநாதன், சுயேட்., 5, பா.ஜ., ஒருவர் என, 33 பேர் இணைந்து, கலெக்டர் கலைச்செல்வியிடம் கடந்த 7ம் தேதி , மனு அளித்தனர்.
இதையடுத்து, கவுன்சிலர்கள் எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், மாமன்ற கூட்டத்தை நடத்த முடியாததால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாமல் இருந்து வருகிறது. தி.மு.க., மேயருக்கு எதிராக, தி.மு.க., கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்ததால், காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சுந்தருக்கு இந்த சூழல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே மேயரின் கணவர் யுவராஜின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட செயலர் சுந்தரிடம், தி.மு.க., கவுன்சிலர்கள் புகாராக தெரிவித்திருந்தனர்.
மாவட்ட செயலர் சுந்தர்,மேயரின் மீதும், யுவராஜின் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியடைந்த தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., வுடன் சேர்ந்து மேயரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் அளவிற்கு அமைந்தது.
வேறுவழியின்றி தி.மு.க., கவுன்சிலர்கள், காங்., துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோரை சமாதானம் செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்தது.
அதன்படி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று காலை, தி.மு.க., - சுயே., கவுன்சிலர்கள் மற்றும் காங்., துணை மேயர் குமரகுருநாதன் என, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினார்.
அமைச்சரிடம் விளக்கம்
உடன், காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த பேச்சில் போதிய முடிவுகள் எட்டப்படாததால், தி.மு.க., கவுன்சிலர்கள் 20 பேர் தங்கள் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக, இரண்டாம் கட்ட பேச்சு, மாவட்ட செயலர் சுந்தர் தலைமையில், காஞ்சிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
சென்னையில் அமைச்சர் நேருடன் நடந்த பேச்சின்போது பேசப்பட்டவை குறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தரப்பில் கூறியதாவது:
தி.மு.க., கவுன்சிலர்கள் 32 பேர், காங்., துணைமேயர் குமரகுருநாதனை அழைத்து அமைச்சர் நேரு பேச்சு நடத்தினார். இதில், மேயர் மற்றும் மேயர் கணவரின் ஆதிக்கம் குறித்தும் தெரிவித்தோம். அதேபோல, கவுன்சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, மேயர் மற்றும் மேயரின் கணவரும் மறுப்பு தெரிவித்தனர்.
பிரச்னையின்றி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர் அறிவுறுத்தினார். கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு குறித்து, மேயர் மகாலட்சுமியிடம், அமைச்சர் நேரு காட்டமாக கேட்டார். மாநகராட்சியில் எந்த விதிமீறலும், முறைகேடும் நடக்கவில்லை என, மேயர் தரப்பினர் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர்.
மேயர் மகாலட்சுமியின் தலைமையின் கீழ் எங்களால் பணியாற்ற முடியாது எனவும், மேயரை கட்டாயம் மாற்ற வேண்டும் என, அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இதுகுறித்து கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்படும் என, அமைச்சர் கூறியதை தொடர்ந்து பேச்சை முடித்தார்.
இவ்வாறு தி.மு.க., கவுன்சிலர்கள் கூறினர்.