/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நவீன எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு திறப்பு
/
நவீன எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு திறப்பு
ADDED : மே 20, 2025 08:40 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 40,000 பேர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் யாராவது இறந்தால், அங்குள்ள நான்கு சுடுகாடுகளில் அடக்கம் செய்து வருகின்றனர்.
நான்கு சுடுகாடுகளிலும் போதிய இடவசதி இல்லாமல், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால், உத்திரமேரூரில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 2021 --- 22ம் நிதி ஆண்டில், பேரூராட்சி மூலதன மானிய திட்டத்தின் கீழ், 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உத்திரமேரூர் நல்லதண்ணீர்குளம் அருகே, நவீன எரிவாயு தகனமேடை கட்டும் பணி கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது.
இந்நிலையில், நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் பங்கேற்று, எரிமேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.