/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் மேம்பால ஓட்டைகளால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
ஒரகடம் மேம்பால ஓட்டைகளால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஒரகடம் மேம்பால ஓட்டைகளால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஒரகடம் மேம்பால ஓட்டைகளால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 22, 2024 03:52 AM

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் - தாம்பரம் செல்லும் சாலையில், 3,600 ஏக்கர் பரப்பில், 2005ல், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டது. இதில், கார், கனரக வாகனங்கள், மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும், தேசிய அளவிலான வாகன ஆராய்ச்சி மையம் உட்பட, 127 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளுக்கு, மூலப்பொருட்களை கொண்டு வரவும், உற்பத்தியாகும் பொருட்களை எடுத்துச் செல்லவும் ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன. நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு, ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் மற்றும் வண்டலுார் - வாலாஜாபாத் சந்திப்பு சாலையில், 2010ல் ஒரகடம் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி, 2012ல் நிறைவு பெற்றது.
இந்த பாலத்தின் மீது, கனரக வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் செல்லும் போது, குதித்து குதித்துச் செல்கின்றன. இந்த அதிர்வினால், ஆங்காங்கே ஓட்டை விழுந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக உள்ளன.
குறிப்பாக, நேற்று முன்தினம் சாதாரண கார் செல்லும் போது, ஒரகடம் மேம்பாலத்தில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்துள்ளது. இருப்பினும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடக்கூடாது என, இரும்பு தடுப்பு போட்டுவிட்டு விபத்தினை தவிர்க்க பிற வாகன ஓட்டிகள் ஏற்பாடு செய்துவிட்டு சென்றனர்.
இதையறிந்த, தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தினர், தற்காலிகமாக சிமென்ட் ஜல்லி போட்டு சரி செய்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சிக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரகடம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், அதை பழுது நீக்க புதிய திட்டம் தயாரிக்க உள்ளோம்.
குறிப்பாக, மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது, குதித்து செல்கின்றன. இதையும் சரி செய்யும் வகையில், வடிவமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.