/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் ஐந்து இடங்களில் துவக்கம்
/
நெல் கொள்முதல் நிலையம் ஐந்து இடங்களில் துவக்கம்
ADDED : ஆக 29, 2025 12:52 AM
வாலாஜாபாத்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்திரமேரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஐந்து இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று துவங்கப்பட்டன.
வாலாஜாபாத் வட்டாரம், மாகரல் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நவரை பருவத்திற்கு சாகுபடி செய்த நெல் பயிர்கள் கடந்த ஏப்ரல், மே., மாதங்களில் அறுவடை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, இரண்டாம் போக சொர்ணவாரி பட்டத்திற்கு, செய்யாற்று பாசனம் மற்றும் கிணற்று பாசனம் மூலம், இப்பகுதிகளில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் அப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
அப்பயிர்கள் தற்போது கதிர் முற்றிய நிலையில் அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மாகரல், கீழ்பேரமநல்லுார், விச்சந்தாங்கல் மற்றும் தம்மனுார் ஆகிய கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
l உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில், விவசாயிகள் 350 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள, சொர்ணவாரி பருவ நெல்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.
அவ்வாறு அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய, திருமுக்கூடலில் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் திருமுக்கூடலில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி, ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமையில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், மேற்கண்ட ஐந்து இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை நேற்று துவக்கி வைத்தார்.