ADDED : மார் 13, 2026 05:27 AM

உத்திரமேரூர்,
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, உத்திரமேரூரில் நேற்று துணை ராணுவ படையினர் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடும்.
இந்நிலையில், தேர்தலையொட்டி, தேர்தல் பணிக்கு துணை ராணுவ படையினர் உத்திரமேரூர் வந்துள்ளனர்.
அவர்கள், பாதுகாப்பான முறையில் அமைதியான ஓட்டளிப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று அணி வகுப்பு பேரணி நடத்தினர்.
துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர் விஜய்சாரி தலைமையில் நடந்த இப்பேரணியை, உத்திரமேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இதில், துணை ராணுவ வீரர்களுடன் போலீசாரும் பங்கேற்றனர்.
உத்திரமேரூர் அம்பேத்கர் சிலை அருகே இப்பேரணி துவங்கி, பஜார் வீதி, பெரிய நாரசம்பேட்டை தெரு, கேதரீஸ்வரர் கோவில் தெரு மற்றும் தாசில்தார் அலுவலக சாலை வழியாக மீண்டும் அம்பேத்கர் சிலை அருகே வந்தடைந்து பேரணி நிறைவு பெற்றது.

