/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'சிசிடிவி'க்கள் இல்லாத ரயில் நிலையங்கள் பாதுகாப்பு இல்லை என பயணியர் குற்றச்சாட்டு
/
'சிசிடிவி'க்கள் இல்லாத ரயில் நிலையங்கள் பாதுகாப்பு இல்லை என பயணியர் குற்றச்சாட்டு
'சிசிடிவி'க்கள் இல்லாத ரயில் நிலையங்கள் பாதுகாப்பு இல்லை என பயணியர் குற்றச்சாட்டு
'சிசிடிவி'க்கள் இல்லாத ரயில் நிலையங்கள் பாதுகாப்பு இல்லை என பயணியர் குற்றச்சாட்டு
ADDED : அக் 03, 2025 09:54 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள புதிய, பழைய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது, பாதுகாப்பில்லாத சூழலாக இருப்பதாக ரயில் பயணியர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரில் ஏகாம்பரநாதர் கோவில் அருகே புதிய ரயில் நிலையமும், ரயில்வே ரோடு முனையில் பழைய ரயில் நிலையமும் இயங்கி வருகிறது. இந்த இரு ரயில் நிலையங்களிலும், அன்றாடம் ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் வந்து செல்கின்றனர்.
ரயில் பயணத்தை நம்பி பல ஆயிரம் பெண்கள், ஆண்கள் சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும், பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரம் கோவில்களுக்கு வருகின்றனர்.
பயணியருக்கு அடிப்படை வசதியான கழிப்பறை வசதி இரு ரயில் நிலையங்களிலும் இன்று வரை இல்லை. புதிய ரயில் நிலையத்தில், கழிப்பறையை பூட்டி சாவியை அலுவலகத்தில் வைத்திருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இரு ரயில் நிலையங்களிலுமே, 'சிசிடிவி' எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது, பயணியருக்கு பாதுகாப்பு வசதியை உறுதிப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
பொது இடங்களில் செயின் பறிப்பு, பாலியல் தொல்லை, அடிதடி, விபத்து போன்ற சம்பவங்கள் நடக்கும் சூழலில், ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது, பயணியருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தால், அவற்றை கண்டறிவதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம், கண்காணிப்பு கேமராக்களை நிறுவ தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.