/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் 4,500 பேருக்கு... பட்டா ரெடி!: ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில் சர்வே பணி நிறைவு
/
அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் 4,500 பேருக்கு... பட்டா ரெடி!: ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில் சர்வே பணி நிறைவு
அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் 4,500 பேருக்கு... பட்டா ரெடி!: ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில் சர்வே பணி நிறைவு
அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள் 4,500 பேருக்கு... பட்டா ரெடி!: ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில் சர்வே பணி நிறைவு
ADDED : டிச 15, 2024 08:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய இரு தாலுகாக்களில், சென்னையின் பெல்ட் ஏரியா எல்லைக்குள் வரும் பகுதிகளில், ஆட்சேபனை இல்லாத அரசு நில ஆக்கிரமிப்பாளர்கள், 4,500 பேருக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் நகரமயமாதல் காரணமாக, கடந்த 1962ல், சென்னையை சுற்றி 32 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதிகளில், 'பெல்ட் ஏரியா' என பெயரிட்டு, அரசு நிலங்களில் ஆக்கிரமித்து வீடு கட்டி வசிப்பவர்களுக்கும், பிற வகையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பட்டா வழங்க கூடாது என, தடை உத்தரவு வழங்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதாவது, நிலங்களின் மதிப்பு அதிகம் மற்றும் எதிர்காலத்தில் அரசின் தேவைகளுக்காக, இந்த 32 கி.மீ., சுற்றளவில் உள்ள அரசு இடங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னையை சுற்றியுள்ள 32 கி.மீ., சுற்றளவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நிலங்களில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
அரசாணை பிறப்பிக்கும்போது, சென்னை சுற்றிய பகுதிகள் சைதாப்பேட்டை மாவட்டமாக இருந்தது. இதில், பொன்னேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், சைதாப்பேட்டை என, நான்கு தாலுகாக்கள் பெல்ட் ஏரியாக்களில் இருந்தன.
தற்போது, இந்த பகுதிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, நான்கு மாவட்டங்களில் பல தாலுகாக்களாக பிரிந்து காணப்படுகின்றன.
பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்ட நான்கு தாலுகாக்களிலும், 532 வருவாய் கிராமங்கள் வருகின்றன. இந்த 532 வருவாய் கிராமங்களிலும், பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பட்டா கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில், பெல்ட் ஏரியாவில் பட்டா இல்லாமல், அரசு நிலங்களில் வசிப்போருக்கு, புதிய சிறப்பு திட்டம் மூலம் பட்டா வழங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளது.
சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டா சம்பந்தமான பிரச்னையை தீர்க்க, மார்ச் மாதம் 1ம் தேதி, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், அமைச்சர்கள், அதிகாரிகள் என, 19 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்கள் விபரங்களை, சில மாதங்களாக வருவாய் துறையினர் சேகரித்து வந்தனர். இந்நிலையில், மாநில அளவிலான உயர்நிலை குழுவின் இரண்டாவது கூட்டம், கடந்த 9ம் தேதி, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், தலைமை செயலகத்தில் நடந்தது.
இதில், கிராம நத்தம் உள்ளிட்ட நில வகைப்பாடுகளில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெல்ட் ஏரியாவில் வரும் ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய இரு தாலுகாக்களிலும், 78 வருவாய் கிராமங்களில், வருவாய் துறையினர் ஏற்கனவே சர்வே எடுத்துள்ளனர்.
அதில், அரசுக்கு ஆட்சேபனை இல்லாத கிராம நத்தம், தோப்பு உள்ளிட்ட நில வகைப்பாடுகளில் வசிப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த இரு தாலுகாக்களிலும், 4,500 பேருக்கு, பட்டா வழங்க, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. அடுத்தகட்டமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்குவது பற்றி அரசு தான் முடிவு செய்யும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி கூறியதாவது:
பெல்ட் ஏரியாக்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது பற்றி அரசு தான் முடிவு செய்யும். கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளோம். மாவட்ட அளவில், 4,500 பேருக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்கிறோம்.
அரசு நிலங்களில் ஆக்கிரமித்து வீடு கட்டி வசிப்பவர்களிடம் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தியுள்ளோம். அதில், நத்தம், தோப்பு உள்ளிட்ட ஆட்சேபனை இல்லாத நிலங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும்.
நீர்நிலை ஆக்கிரமிப்பாக இருந்தால் பட்டா வழங்கப்படாது. எப்போது பட்டா வழங்குவது என, அரசு தான் முடிவு செய்யும். ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் தாலுகாக்களில் உள்ள பெல்ட் ஏரியாக்களில் வசிப்போருக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.