பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பழுதால் தேக்கம்
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பழுதால் தேக்கம்
UPDATED : ஜூன் 04, 2026 05:34 PM
ADDED : ஜூன் 04, 2026 05:00 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை அடுத்த, கோனேரிக்குப்பம் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம் அடைந்துள்ளன.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கு தரம் பிரித்து தூளாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் மூலம் ஊராட்சிக்கு வருவாயும் கிடைத்து வந்தது.
இந்நிலையில், சில வாரங்களாக இந்த பிளாஸ்டிக் அரைக்கும் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்து, முற்றிலும் முடங்கியுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:
தினசரி, 50 கிலோ வரை பிளாஸ்டிக் கழிவுகள் அரைக்கப்பட்டு வந்த நிலையில் இயந்திரம் திறன் குறைந்து 15 கிலோ மட்டும் அரைக்க முடிந்தது.
இது குறித்து இயந்திர தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்து சரி செய்து தருவதாக தெரிவித்துள்ளார்கள்.
அதன் பின் வழக்கமாக பணிகள் தொடரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
