ADDED : மார் 27, 2025 10:29 PM
காஞ்சிபுரம்,:திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், வாலாஜாபாத் அருகே வாடகை வீட்டில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இளம்பெண் கடந்த மாதம், வீட்டுக்கு அருகே கடைக்கு சென்றபோது, நான்கு வாலிபர்கள், இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இந்த விவகாரத்தில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்து, கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கா, சந்துரு உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ரங்கா, 23, என்பவர், சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது ஒரு கொலை, நான்கு இதர வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஏற்கனவே சிறையில் உள்ள இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் கலெக்டருக்கு, எஸ்.பி.,சண்முகம் பரிந்துரை செய்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவை தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் ரங்கா கைது செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவை, சிறையில் போலீசார் அவரிடம் வழங்கினர்.
