/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு பாலத்தில் மணல் குவியல் அகற்றம்
/
செவிலிமேடு பாலத்தில் மணல் குவியல் அகற்றம்
ADDED : நவ 17, 2024 01:01 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடு -- புஞ்சையரசந்தாங்கல் இடையே உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தின் வழியாக தினமும், டூ - வீலர், கார், பேருந்து, லாரி என, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பாலம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு லாரி வாயிலாக எம்.சாண்ட் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. லாரிகளில் இருந்து சிதறிய எம்.சாண்ட் மணல், பாலாறு பால சாலையோரம் குவியலாக இருந்தது.
மேலும், பாலத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டையில் மணல் குவியலால் அடைப்பு ஏற்பட்டது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் மணல் குவியலில் சிக்கி விபத்தில் சிக்கினர்.
எனவே, செவிலிமேடு பாலாறு பால சாலையோரம் குவிந்துள்ள எம்.சாண்ட் மணலை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், செவிலிமேடு பாலாறு பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழைநீர் வெளியேறும் ஓட்டையிலும் சாலையோரம் இருந்த மணல் குவியல் நேற்று அகற்றப்பட்டது.