/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாடவீதி நடைபாதைகளை சீரமைக்க கோரிக்கை
/
மாடவீதி நடைபாதைகளை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 28, 2025 01:49 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் மாடவீதிகளை சுற்றியுள்ள நடைபாதைகளை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவிலை சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை, மின்விளக்கு, நவீன கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்த, மத்திய அரசு, 19.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்நிதியில் ஒரு பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளில் நடைபாதை அமைக்கப்பட்டது.
நடைபாதை கட்டுமானப் பணி முறையாக நடைபெறாததால், தடுப்புச்சுவர் கற்கள் சில ஆண்டுகளிலேயே சரிந்து விழுந்துள்ளன. மேலும், நடைபாதையில் செடிகள் வளர்ந்துள்ளதால், நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள நடைபாதையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.