/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் அறுவடை இயந்திர வாடகை கட்டணம்... குறைப்பு: வேளாண் துறை நடவடிக்கையால் நிம்மதி
/
நெல் அறுவடை இயந்திர வாடகை கட்டணம்... குறைப்பு: வேளாண் துறை நடவடிக்கையால் நிம்மதி
நெல் அறுவடை இயந்திர வாடகை கட்டணம்... குறைப்பு: வேளாண் துறை நடவடிக்கையால் நிம்மதி
நெல் அறுவடை இயந்திர வாடகை கட்டணம்... குறைப்பு: வேளாண் துறை நடவடிக்கையால் நிம்மதி
ADDED : ஏப் 16, 2025 09:04 PM

காஞ்சிபுரம்:சம்பா மற்றும் நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், அவற்றை அறுவடை செய்யும் இயந்திரங்களின் வாடகை கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள், வேளாண் துறையினர் மற்றும் வாடகை இயந்திர உரிமையாளர்கள் நடத்திய பேச்சில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
சம்பா மற்றும் நவரை ஆகிய இரு பருவங்களிலும் பயிரிடப்பட்ட நெல், சமீபத்தில் அறுவடைக்கு வந்துள்ளன.
ஒரே நேரத்தில், பெரும்பாலான விவசாயிகளின் நெல் அறுவடைக்கு வந்திருப்பதால், நெல் அறுவடை செய்வதற்கு ஏற்ப, அறுவடை இயந்திரங்கள் கிடைக்கவில்லை.
சில இடங்களில் இயந்திரங்கள் கிடைத்தாலும், வாடகை கட்டணம் கூடுதலாக உள்ளது. இதனால், முதலுக்கே மோசம் ஏற்படும் என, விவசாயிகள் புலம்பினர்.
இது சம்பந்தமாக, மாவட்ட வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, வாடகை கட்டணம் நிர்ணயம் செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர், வேளாண் பொறியியல் துறை அலுவலர், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர், சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
முக்கிய பிரச்னைகளாக, இந்த கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:
வயலில் தண்ணீர் தேங்கியிருந்தால் ஒரு தொகையும், தண்ணீர் தேங்காமல் நிலம் காய்ந்திருந்தால் அதற்கு ஒரு தொகையும் என கேட்டு பெறுகின்றனர். இந்த கட்டணம், தாலுகாவிற்கு ஏற்ப மாறுபடுகிறது.
அவரவர் இஷ்டத்திற்கு வாடகை கட்டணத்தை உயர்த்துகின்றனர். வழக்கமாக வாங்கும் கட்டணத்தைவிட, இரு மடங்கு கூடுதலாக பெறுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதற்கு பதிலளித்து வாடகை இயந்திர உரிமையாளர்கள் கூறுகையில், 'இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அதற்கான உபகரணங்கள் உடனே கிடைப்பதில்லை. அதை அதிக விலை கொடுத்து வாங்கி, பழுது நீக்க வேண்டியதாகிறது. தவிர, தாலுகா வாரியாக செல்லும்போது எரிபொருள் அதிகம் செலவாகிறது. அதனால், கி.மீ., கணக்கு செய்து வசூலிக்கிறோம்' என்றனர்.
கூட்டத்தின் முடிவில், இயந்திரத்தில் நெல் அறுவடை செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு குறிப்பிட்ட கட்டணம் தருவது என முடிவு செய்யப்பட்டது.
அதாவது, இரண்டு சக்கரங்களில் நகர்ந்து நெல் அறுவடை செய்யும் இயந்திரத்திற்கு, 1,650 ரூபாய். நான்கு சக்கரங்களில் நகர்ந்து நெல் அறுவடை செய்யும் இயந்திரத்திற்கு, 1,800 ரூபாய். பெல்ட் இயந்திரத்தில் நெல் அறுவடை செய்யும் வாகனத்திற்கு, 2,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டணம், கடந்த ஆண்டைவிட குறைவு என்பதால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நெல் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு, அறுவடை இயந்திரங்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. எளிதாக கிடைக்கும் வாகனங்களும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது.
இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, விவசாயிகள், வேளாண் துறையினர், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சு நடந்தது. இதன் முடிவில், குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம்.
இந்த கட்டணம் கடந்த ஆண்டைவிட குறைவு. விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நெல் அறுவடை செய்ய அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு ஆகிய புகார்களுக்கு, வேளாண் பொறியியல் துறை துறை - 96005 43464 மற்றும் வேளாண் அலுவலர் - 76399 60862 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாரல் மழையால் அச்சம் அடைந்த விவசாயிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரி, கிணறு மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக, நவரை பட்டத்திற்கு பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
அதில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களை, சில நாட்களாக தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றனர்.
அறுவடையான நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து விற்பனைக்காக காத்துள்ளனர்.
இந்நிலையில், வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பிட்ட சில பகுதிகளில் திடீரென காற்றுடன் சாரல் மழை பெய்தது.
இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் குவித்து வைத்திருந்த விவசாயிகள் பதற்றம் அடைந்தனர்.
தங்களது நெல், மழையில் நனையாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தார்ப்பாய் போர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பின், அதிக மழைப்பொழிவு இல்லாமல் லேசான துாரலோடு மேகம் கலைந்ததால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.