/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தரைப்பால கம்பியால் விபத்து அபாயம்
/
தரைப்பால கம்பியால் விபத்து அபாயம்
ADDED : பிப் 25, 2024 02:14 AM

காஞ்சிபுரம்,:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த இருவழி சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. 65 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில், வாலாஜாபாத் புறவழி சாலையில், உயர்மட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இதில், முத்தியால்பேட்டை கிராமத்தில், கசக்கால்வாய் குறுக்கே தரைப்பாலம் கட்டுமான பணி, 2022ம் ஆண்டு துவக்கி, கடந்த ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
இருப்பினும், பாலத்தின்தடுப்புச்சுவர் ஓரம், இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கால்களில் சிக்கி விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, தரைப்பாலத்தின் ஓரம் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பியை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.