/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் தட்டுப்பாடு கீழ்கதிர்பூரில் சாலை மறியல்
/
குடிநீர் தட்டுப்பாடு கீழ்கதிர்பூரில் சாலை மறியல்
ADDED : மார் 10, 2024 01:14 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் நகரையொட்டி செல்லும் வேகவதி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கும் வழங்குவதற்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஏழு ஆண்டுகளுக்கு முன், 200 கோடி ரூபாய் மதிப்பில், கீழ்கதிர்பூர் கிராமத்தில் 2,112 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இதில், வேகவதி ஆற்றிலிருந்து பலர் இன்னும் அகற்றப்படாத நிலையில், 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.
இங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பழுது காரணமாக, சில நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் இந்த பிரச்னையை கண்டுகொள்ளாத காரணத்தால், குடியிருப்புவாசிகள் நேற்று கீழ்கதிர்பூர் சாலையில், நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் மறியல் செய்ததால், அவ்வழியாக சென்ற வாகனங்கள் வரிசையாக நின்றன. தகவலறிந்த காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஸ்வரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்தவர்களிடம் சமாதானம் செய்தனர்.
குடிநீர் பிரச்னையை சரி செய்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த குடியிருப்புவாசிகளுக்கு தேவையான கடைகள், சுடுகாடு போன்றவை இன்று வரை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

