சாலை போடும் பணி முடக்கம்: கம்பிகள் துருப்பிடிப்பு
சாலை போடும் பணி முடக்கம்: கம்பிகள் துருப்பிடிப்பு
ADDED : மே 25, 2026 09:31 AM

காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி முடக்கத்தால், சிறுபாலம் கம்பிகள் துருப்பிடித்து வருகின்றன.
சென்னையில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், கோவிந்த வாடி, பாணாவரம், ராணிப்பேட்டை வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைய உள்ளது.
இந்த பணிக்கு, 2016ல், நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தினர். அதிவிரைவு சாலை விரிவாக்க பணிக்கு, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
அதிவிரைவு சாலைக்கு, புதிய சாலை போடுவதற்கு, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்தனர்.
முதற்கட்டமாக, கூத்த வாக்கம் ஏரி, மேபொடவூர், மணியாட்சி, கோவிந்தாவடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றன.
இதையடுத்து, உயர் மட்ட பாலங்கள் மற்றும் அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை போடும் பணியை, அந்தந்த சாலை போடும் ஒப்பந்தம் எடுத்தவர்கள் செய்து வருகின்றனர்.
சித்துார் முதல் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நடந்து வருகின்றன. இதில், 76 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளன. இதில், ஏரிகளில் சாலை போடும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன.
உதாரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார் ஆகிய கிராமங்களில் பில்லர் போடும் பணி அரைகுறையாக உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, சிறுவாக்கம் ஆகிய பகுதிகளில் பாலங்கள் இணைப்பு ஏற்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிக்க வேண்டிய சாலை போடும் பணிகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியால், ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகாமில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கு சென்று விட்டனர். ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
பருவ மழை பாதிப்பு மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால், சென்னை - பெங்களூரு இடையே, அதிவிரைவு சாலை போடும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது.
மேம்பாலம் மற்றும் சிறுபாலங்களுக்கு போடப்பட்ட இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீணாகி வருகிறது. மேலும், ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்லும் போது கம்பிகளுக்கு இடையே சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அதிவிரைவு சாலை போடும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
