ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கூடுதல் எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு பணி
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் கூடுதல் எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு பணி
ADDED : மார் 13, 2026 04:38 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், கூடுதல் எஸ்.பி., தலைமையிலான பாதுகாப்பு பணிகள் தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள இருப்பதாக, எஸ்.பி., சண்முகம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் தேர்தல் கமிஷன், நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வரலாம் என்ற சூழலில், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
வருவாய் துறை மற்றும் பிற அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் சூழலில், போலீசார், சட்டம் - ஒழுங்கு, ரவுடிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் தீவிரமாக மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி., சண்முகம் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லை, ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வருகிறது.
இந்த பகுதி களில் உள்ள ரவுடிகள் பலரும் ஏற்கனவே சிறையில் உள்ளனர். பலரும் கண்காணிப்பில் உள்ளனர்.
'ஏ' பிளஸ் ரவுடிகள் பலர் மாவட்டத்திற்கு வெளியே உள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 560 பேர் உள்ளனர்.
அவர்களை கண்காணிக்கிறோம். பதற்றமான ஓட்டுச்சாவடிகளை அந்தந்த காவல் ஆய்வாளர்கள் நேரில் சென்று பார்க்க கூறியிருக்கிறோம்.
குறிப்பாக, ஏகனாபுரம் உள்ளிட்ட குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளை கவனத்தில் கொண்டுள்ளோம். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தலா, ஒரு கூடுதல் எஸ்.பி.,க்களை நியமித்து, கண்காணிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
