/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிலாம்பாக்கம் அணைக்கட்டு 1,600 ஏக்கரில் பாசன வசதி
/
சிலாம்பாக்கம் அணைக்கட்டு 1,600 ஏக்கரில் பாசன வசதி
ADDED : ஆக 30, 2025 12:34 AM
காஞ்சிபுரம்,
சிலாம்பாக்கம் புது அணைக்கட்டால், 1,600 ஏக்கர் பாசன வசதி மற்றும் 130 விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும் என, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட சிலாம்பாக்கம் கிராமத்தில், செய்யாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு ஏற்படுத்த, நபார்டு திட்டத்தின் கீழ், 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணைக்கட்டு பணிகள், 2023ல் துவங்கி நடைபெற்று வருகின்றன.
ஆற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் உயரம் கொண்டதாக புதிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. அணைக்கட்டு பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது தண்ணீர் அதிகளவு வந்ததால், பணிகள் சற்று தாமதம் ஆனது.
மேலும் கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், கட்டுமான பணிகள் மேலும் தாமதமாகின.
இந்நிலையில், எட்டு மாதங்களாக அணைக்கட்டு கட்டுமானம், 95 சதவீத பணிகள் முடிவு பெற்றதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுமான பணிகள் முடிந்ததாகவும், அணைக்கட்டு சுற்றியுள்ள இடங்களில் அதிகளவு மணல் நிரம்பி காணப்படுவதாகவும், அவற்றை அகற்றிவிட்டால், தண்ணீர் ஏரிகளுக்கு செல்லவும், சேமிக்கவும் முடியும் என்கின்றனர்.
அந்த பணிகள் முடிந்தவுடன் பாசன வசதிக்கு அணைக்கட்டு பயன்படும் என, நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அணைக்கட்டு சுற்றி, 1,600 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதோடு, 130 விவசாய கிணறுகளில், நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

