/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சோலார் சிக்னல் பழுது வாகனங்களால் விபத்து அபாயம்
/
சோலார் சிக்னல் பழுது வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : அக் 06, 2025 12:41 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, கண்டிகை சந்திப்பில் பழுதாகி, செயல்படாமல் உள்ள தானியங்கி சோலார் சிக்னலால், தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.
வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகையில் இருந்து பனையூர், எழிச்சூர் வழியாக, பாலுார் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.
போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், கனரக வாகனங்களால் பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
குறிப்பாக இரவு நேரங்களில், எழிச்சூர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள், திடீரென வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் திருப்புவதால், நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதி, விபத்து ஏற்பட்டு வந்தது.
இதனால், இச்சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில், சோலார் பேனலுடன் தானியங்கி சிக்னல் ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒரு வாரத்திற்கு மேலாக சிக்னல் பழுதடைந்து செயல்படமால் உள்ளது. இதனால், முக்கிய சந்திப்பில், அசுர வேகத்தில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால், விபத்து ஏற்படும் நிலை அதிகரித்து உள்ளது. செயல்படாமல் உள்ள சிக்னலை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.