/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சண்டையை விலக்கிய தாயை வெட்டி கொன்ற மகன் கைது
/
சண்டையை விலக்கிய தாயை வெட்டி கொன்ற மகன் கைது
ADDED : அக் 25, 2025 11:24 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தில் உள்ள முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 65; இவருக்கு செல்லப்பன், 50, துரைசாமி, 45. என, இரு மகன்கள் உள்ளனர்.
செல்லப்பனும், துரைசாமியும் அதே கிராமத்தில் உள்ள குட்டை புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி பின்னர் சொத்து தகராறு காரணமாக அங்கேயே தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனர்.
செல்லப்பன் வீட்டிலிருந்து துரைசாமி வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டதிலும், சாணம் கொட்டுவதிலும் சகோதரர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. துரைசாமியுடன், தாய் தனலட்சுமி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாடு சாணம் கொட்டுவது பற்றி செல்லப்பனுக்கும், துரைசாமிக்கும் இடையே நேற்றும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. செல்லப்பன், தன் சகோதரர் துரைசாமியை கட்டையால் தாக்கியதை, தாய் தனலட்சுமி விலக்கி விட்டுள்ளார்.
அப்போது, இந்த பிரச்னைக்கு காரணம் தன் தாய் தான் என நினைத்து, தாய் தனலட்சுமியை, ஆடு வெட்டும் கத்தியை கொண்டு, செல்லப்பன் வெட்டியுள்ளார்.
படுகாயமடைந்த தனலட்சுமி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே இறந்தார்.
பொன்னேரிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, செல்லப்பன், 50, அவரது மனைவி சுனிதா, 40 மற்றும் மகன் லோகேஷ், 25. ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

