/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பு சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
/
கரும்பு சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
கரும்பு சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
கரும்பு சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 29, 2025 06:55 AM

உத்திரமேரூர்: கரு ம்பு சுமை துாக்கும் பெண் தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல பகுதிகளில், ஆறு மற்றும் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். சாகுபடி செய்யும் கரும்புகளை அறுவடைக்கு பின், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்புகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கரும்பு அறுவடை கடந்த வாரம் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், தோட்டத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிக்கு கரும்புகளை கொண்டு வந்து சேர்க்கும் சுமை துாக்கும் பெண் தொழிலாளர்கள், தங்களுக்கு கட்டுப்பாடியாகாத கூலி வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கரும்பாக்கம் பெண் தொழிலாளர்கள் கூறியதாவது:
தோட்டத்தில் அறுவடை செய்யும் கரும்புகளை, நிலத்தில் இருந்து வெளியேற்றி ஆலைக்கு கொண்டு செல்ல, லாரியில் ஏற்ற வசதியாக குறிப்பிட்ட ஒரு இடம் தேர்வு செய்யப்படும்.
அந்த இடத்திற்கு கரும்புகளை தலை மேல் சுமந்து வந்து சேர்க்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு, நாள் முழுக்க கரும்பு கத்தைகளை தலைமேல் சுமந்து வந்து குறிப்பிட்ட இடத்தில் சேர்க்கிறோம். ஆனால், 300 ரூபாய் மட்டுமே ஒரு நாள் கூலியாக கிடைக்கிறது.
கரும்பு வெட்டும் ஆண் தொழிலாளர்களுக்கு, 800 - 1,000 ரூபாய் வரை வழங்கும் போது, கரும்புகளை தலையில் சுமக்கும் பெண் தொழிலாளர்களுக்கு, 400ல் இருந்து 500 ரூபாய் வரை வழங்கலாம்.
கரும்பு அறுவடை பணியில் ஆண்டுதோறும், ஆண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கரும்பு கத்தைகள் சுமை துாக்கும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரே கூலிதான் வழங்கப்படுகிறது.
எனவே, கரும்பு பயிரிடும் உரிமையாளர்கள் பெண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தி தர முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

