ADDED : ஜன 19, 2025 07:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், 'எழுதுக' என்ற புத்தகம் எழுதும் இயக்கம், கடந்த 2020 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு மற்றும் புத்தகம் எழுதும் பயிற்சி அளித்து, மாணவர்களை எழுத்தாளர்களாக உருவாக்கி வருகிறது.
அந்த இயக்கம் சார்பில், தமிழகம் முழுதும் 20 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, ஓராண்டாக பயிற்சி வழங்கியதில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறுக்கெழுத்து என, பல்வேறு தலைப்புகளில் எழுதி வந்தனர்.
இறுதியாக, 100 மாணவர்கள் எழுதியுள்ள 100 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு, வரும் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் முனைவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., புத்தகங்களை வெளியிட உள்ளார்.
இப்புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பாரதிதாசன் கவிதைகளை மையப்படுத்தி, காஞ்சிபுரத்தில் நேற்று ஆய்வரங்கம் நடந்தது. இதில், புத்தகம் எழுதியுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வரங்க நடுவர்களாக எழுத்தாளரும், பேச்சாளருமான முனைவர் கதிரவன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமுதகீதன், தமிழாசிரியை ரேணுகா ஆகியோர் பங்கேற்றனர். ‛எழுதுக' அமைப்பின் சுகுமாறன் தலைமை வகித்தார்.