/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
பாலாற்று குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : மார் 01, 2024 12:28 AM

ஸ்ரீபெரும்புதுார்:தாம்பரம் -- பல்லாவரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, வாலாஜாபாத் அருகே, பாலாற்றில் பழையசீவரம், வெண்குடி நீரேற்று நிலையங்களில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் குழாயானது, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் புதைக்கப்பட்டு, ஒரகடம், செரப்பணஞ்சேரி, படப்பை வழியே தாம்பரம் செல்கிறது.
இந்த குழாய்கள் பதித்து பல ஆண்டுகள் ஆனதால், அவை பலவீனமாக உள்ளன. இதனால், இந்த குழாய்களில், தண்ணீர் அழுத்தம் காரணமாக, அவை அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில், ஒரகடம் அடுத்த, செரப்பணஞ்சேரியில், இரண்டு மாதங்களுக்கு முன், இந்த குழாய் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர்சாலைகளில் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும், சாலையின் நடுவே, ஏற்பட்ட பள்ளத்தால், வாகன ஓட்டிகள் தொடர் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது, கோடை காலம் நெருங்கும் நிலையில், குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வீணாவதால், பாலாறு குடிநீர் வினியோகமாகும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

